மரித்துக்கொண்டிருக்கும் மனிதத்திற்கு உயிர் கொடுக்கட்டும் கவிதைகள்! #worldpoetryday
கவிதை என்றால் நினைவுக்கு வரும் அழகு! எனில்,
அழகை கண்டால் சாமானியருக்கும்
நினைவுக்கு வரும் ஏதோ ஒரு கவிதையேனும்!
சங்க காலம் முதலாய் காதல், நட்பு, போர்
ஒழுக்கம், வாழ்க்கை, மரபு, காமம்
நெறிகள் சொன்ன கவிதைகள் மாண்போடு
இன்று நம்மெதிரில்! காலத்தால் அழியாமல்...
சொற்களின் கலைநயம் கவிதை!
உடலசைவின் கலைநயம் நடனம்!
ஓசைகளின் கலைநயம் சங்கீதம் !
இயற்கையில் காண்கிறோம் இம்மூன்றையுமே!
இயற்கையழகில் அமையும் இம்மூன்றுமே! எனினும்
செயற்கையாய் நாம் அமைத்திட்ட
சொற்களின் நளின அமைப்பில் கவிதை!
உடலசைவின் நளினத்தில் நடனம்!
ஓசைகளின் நளினத்தில் சங்கீதம் !
இலக்கணத்தோடு காலத்தால் அழியாமல்
இலக்கியமாகிய கவிதைகள் பல!
இலக்கணம் ஏதுமின்றியும் கூட இன்று
நம் மனதில் ஐக்கியமாகிய கவிதைகளும் பலப்பல!
இலக்கணத்தோடு அன்று அமைந்த பல வரிகளில் துவங்கி
தாக்கம் தரும் ஒருவரிக்கவிதைகளும் கவிதைகள் இன்று!
காதல் சொல்லும் கவிதைகள் சோலைவனப் பேரழகு! என்றால்
சோகம் சொல்லும் கவிதைகள் பாலைவன அழகு!
கவிதைக்கு தெரியாது சில சமயம் உரைப்பது மிகையென்று!
ரசிப்பவர்க்கு அதன் அழகில் தெரியாது மிகையொன்றும்!
உயிரில்லா கவிதைகளும் புதுப்பிக்கும் நம் மனதை!
உயிருள்ள கவிதைகளாய் என்றும் வாழும் நம் மனதில்..
உயிரில்லா கவிதைகள் உயிர் கொடுக்கட்டும்
இன்று மரித்துக்கொண்டிருக்கும் மனிதத்திற்கு!
- ஆகர்ஷிணி