அவன் மாறி விட்டானென்று
அவளும்
அவள் மாறி விட்டாளென்று
அவனும்
குற்றம் சாட்டினர்
மாற்றம்
நடுவராய் இருந்து
வழக்கை
விசாரித்துக் கொண்டிருந்தது
நீயும் நானும்
சாம்பல் பூத்திறுகிய
இமைகளைத் திற
வெளிச்சம் பரவட்டும்
நூற்றாண்டுகளாய்
அசைக்காத கைகளை
உயர்த்து
ரத்தம் பாயட்டும்
வேர் விட்டு புதைந்துபோன
கால்களைப் பெயர்த்தெடு
இயக்கம் தொடரட்டும்
புழுக்கள் நெளியும்
அறிவைச் சுத்தம் செய்
சிந்தனை ஒளிரட்டும்
மண்ணில் மக்கிய
மனசை எடு
அன்பு பிரவகிக்கட்டும்
மீண்டும் மீண்டும்
நீயும் நானும்
அழிய நேரினும்
நேசம் வளர்க்க
கொஞ்சம் நீரூற்று
நம் குழந்தைகள் வாழட்டும்
மர்மச் சுழிப்புகளில் ...
கூடிப் பிறந்து
கூடி வளர்ந்து
கூடிப் பகிர்ந்து
வாழ்வின் இறுதியில்
வருந்த ஏதுமில்லாமல்
வன உடலின்
மர்மச் சுழிப்புகளில்
மறைந்து கிடக்கும்
சுனை வாசல்களில்
அதிர்ந்து வீசும்
காற்றின் பின்னலில்
சிறகசைப்பின்
இடைவெளிக் கணத்தில்
தவமிருந்து
மரணத்தை யாத்து
மறைந்து போகும்
பெயரறியாக் காட்டுப் பறவையின்
கனவு போல
நிகழ்ந்து விட வேண்டும்
எதுவும்.