ஆடி 18..அழகர் மலை நூபுர கங்கையில் தீர்த்தமாடி ஆடிப்பெருக்கை கொண்டாடிய மக்கள்.. உற்சாகம்
மதுரை: ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு அழகர் மலையில் உள்ள நூபுர கங்கை தீர்த்த தொட்டியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடினர்.அதனைத் தொடர்ந்து அங்குள்ள ராக்காயி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Recommended Video
மதுரை மாவட்டம் மேலூர் அழகர் மலையில் உள்ளது ராக்காயி அம்மன் கோவில்.இங்கு வழிந்தோடும் நூபுர கங்கை தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்ததாகும்.இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் இதுவரை அறியப்படாத ஒன்றாக உள்ளது.சுற்றுலாத்தலமான இங்கு மதுரை மாவட்டம் மட்டுமல்லாது,பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தினந்தோறும் தீர்த்தமாடி செல்வது வழக்கம்.

ஆடி பதினெட்டாம் தினமானது ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆடிப்பெருக்கு அன்று நூபுர கங்கையில் தீர்த்தமாடிச் செல்வது தென் தமிழக மக்களால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி ஆடிப்பெருக்கான இன்று மதுரை மாவட்டம் மட்டும் அல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திரளாக வந்து நூபுரகங்கையில் தீர்த்தமாடிச் சென்றனர்.மேலும் தீர்த்தங்களை கேன்களில் பிடித்து சென்றனர்.அந்தத் தீர்த்தத்தை குலதெய்வ கோயில்களிலும், தங்கள் வீடுகளிலும், விளைநிலங்களிலும் தெளித்தால் குடும்பத்தினர் நோய் நொடிகள் இல்லாமல் நலத்தோடு வாழ்வர் என்பதும்,நீர் வளம் பெருகி விவசாயம் செழித்தோங்கும் என்பதும் இவர்களது நம்பிக்கையாக உள்ளது.
பெண்கள் தாலி கயிறை மாற்றி புது தாலி கட்டிக் கொள்வதால் தாலி பாக்கியம் நிலைக்கும் என்பதும் அவர்களது நம்பிக்கையாக உள்ளது.இதனையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு கருதி சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நாளைய தினம் காலையில் 8.15 மணிக்கு மேல் 9 மணிக்குள் இக்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்குகிறது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

இதைதொடர்ந்து 5ஆம் தேதி காலையில் தங்கப்பல்லக்கிலும், மாலையில் சிம்ம வாகனத்திலும் சகல பரிவாரங்களுடன் சாமி புறப்பாடு நடைபெறும். 6ஆம் தேதி மாலையில் அனுமார் வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறும். 7ஆம் தேதி மாலையில் கருட வாகனத்தில் புறப்பாடு, 8ஆம் தேதி காலையில் 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கள்ளழகர் பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருள்கிறார். மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

9ஆம் தேதி மாலையில் யானை வாகனத்திலும், 10ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரத்திலும் சுவாமி காட்சி தருகிறார். 11ஆம் தேதி மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார். இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும். இரவு பூப்பல்லக்கு விழா 13ஆம் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications