ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம், நெல்லை ராஜவல்லிபுரம் கோவில்களில் கோலாகல கொடியேற்றம்
மார்கழி திருவாதிரை திருவிழா சிவ ஆலயங்களில் கோலகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நெல்லை ராஜவல்லிபுரம் அழகிய கூத்தர் கோவில் மார்கழி திருவாதிரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஆனி திருமஞ்சனம் தனிச் சிறப்புடையது.
ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். இந்த மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த கோவிலில் ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு இரண்டு முறை தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆனித்திருமஞ்சன தேர்த்திருவிழா கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டு கோவிலுக்குள் கொண்டாட்டங்கள் இன்றி சிறிய அளவில் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நடத்துவதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26ல் மண்டலபூஜை - தங்க அங்கி ஊர்வலம் நாளை தொடங்குகிறது
கோவில் கொடிமரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் செய்தார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வரர் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகிற 29ம் தேதி தேரோட்ட விழா நடைபெறுகிறது. மறுநாள் 30ஆம் தேதி தரிசன விழா நடைபெற உள்ளது. தேரோட்டம் சம்பந்தமாக பொறியாளர்களை தேரை பார்வையிட்டு சென்றுள்ளனர். அதிகாரிகள் அனுமதிக்கும் பட்சத்தில் தேர்வடம் பிடித்து பொதுமக்கள் இழுப்பார்கள் அவ்வாறு இல்லையெனில் அரசு ஆலோசனைப்படி டிராக்டர் கட்டி இழுக்கப்படும் என தெரிகிறது.
நெல்லையில் கொடியேற்றம்
நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறைக்கோவில் என அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் மார்கழி திருவாதிரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 30-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகம், 5.00 மணிக்கு கோ பூஜை, தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி, மதியம் 1 மணிக்கு நடன தீபாராதனை, இரவு 6.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 9.00 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார்.
விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை, நடன தீபாராதனை ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜகோபால் தக்கார் முருகன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.