தலைமைப்பதவி தரும் ஜேஷ்டாபிஷேகம் - தங்கக்குடத்தில் புனித நீர் கொண்டு வந்து நம்பெருமாளுக்கு அபிஷேகம்
ராஜவைப் போல செல்வ வளத்தோடு வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். இன்றைய தினம் ஆனி கேட்டையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனைப் போல வாழ்வு அமையும் தலைமைப் பதவி தேடி வர
சென்னை: ஆனி மாத கேட்டை நட்சத்திரம் அற்புதமானது. அன்று ஜேஷ்டா அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேத ஜோதிடம். ஆனி கேட்டையில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனைப் போல வாழ்வு அமையும் தலைமைப் பதவி தேடி வரும் என்பது நம்பிக்கை.
சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் மிதுன மாதம். ஆனி மாதம் வடமொழியில் ஜேஷ்ட மாதம் என்று பெயர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். ஆனி மாதத்தில் மிக நீண்ட பகல் பொழுது இருக்கும். இது பெரிய மாதமும் கூட. இந்த மாதத்தில்தான் ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட பல முக்கிய விழாக்கள் நடைபெறுகின்றன.
ஜேஷ்டாபிஷேகம், ஆனி திருமஞ்சனம் - ஆனி மாதத்தில் என்னென்ன விஷேசங்கள்
ஆனி உத்திரம், ஆனி கேட்டை, ஆனி மூலம் சிறப்பு வாய்ந்தது. ஜேஷ்ட மாதம் என்றழைக்கப்படும் இந்த ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திர நாளில் ஜேஷ்டாபிஷேகம் என்ற விழா ஆலயங்களில் நடைபெறுகிறது.
ஆனி கேட்டையில் அபிஷேகம்
கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள்தான் ஆனி கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.
காவிரி புனித நீர்
ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் ஆனி கேட்டையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். ஆனி கேட்டை நாளை முன்னிட்டு இன்று நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக காவிரியில் இருந்து தங்கக் குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது. இன்றைய தினம் பெருமாளையும், முருகப்பெருமானையும் வழிபட அரச யோக பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காவிரித்தாய் அபிஷேகம்
ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு காவிரித்தாயே அபிஷேகம் செய்வதாக நம்பிக்கை உள்ளது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி இன்று கோவில் நிர்வாகிகள் காவிரி ஆற்றுக்கு வந்தனர். காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு அவை உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
ஜேஷ்டாபிஷேகம் யாருக்கு
ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதால் அரியவகை மூலிகைகளில் இருந்து கோவில் ஊழியர்களால் தயாரிக்கப்படும் மணமிக்க தைலத்தை பெரிய பெருமாள் மீது பூசப்படும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
அன்ன படையல்
ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான நாளைய தினம் திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
திருமலையில் அபிஷேகம்
திருமலை ஏழுமலையான் கோவில், திருப்பதி கோவிந்த ராஜ பெருமாள் கோவிலில் ஆனி ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்திக்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் அகற்றி பால், தயிர், தேன், இளநீர் மற்றும் மூலிகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்களுடன் சிறப்பு யாகம் நடைபெற்றது.
அரசனை போல வாழ்வு
அரசனைப் செல்வ வளம் பெற்று வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இன்று முருகப்பெருமானையோ, பெருமாளையே அபிஷேகம் செய்து வழிபட அரச பதவி தேடி வரும். அரச பதவிக்கு நிகரான பதவி அரசியல் பதவி, அரசியல் பதவி வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானையும், சிவனையும், பெருமாளையும் நினைத்து வணங்கலாம்.