ரத்த பீஜன்..மகிஷாசுரன்..அசுரர்களை வதம் செய்ய அம்பிகை.. நவராத்திரி புராண கதை இதுதான்!
சென்னை: நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள் இன்னும் சில நாட்களில் தொடங்கப்போகிறது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவது பற்றி புராண கதைகள் சொல்லப்படுகின்றன. அரக்கனை அழிப்பதற்காக அம்பிகை எடுத்த அவதாரங்கள்தான் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மக்களை அச்சுறுத்திய அரக்கர்களை அழிக்க ஒன்பது நாட்கள் போரிட்ட அன்னை இறுதிநாளில் வெற்றிவாகை சூடினாள் இந்த நாளே விஜயதசமி திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
மகிஷாசூரனை அழித்து மகிஷாசூரமர்த்தினியாய் வெற்றிவாகை சூடிய அம்பிகையை கொண்டாடுவதற்காகவே புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அம்பிகை அவதாரம் ஏன் நிகழ்ந்து. எதற்காக இந்த போர் என்றும் நவராத்திரி பற்றியும் தேவி மகாத்மியம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நவராத்திரி 2022: வாழ்க்கையில் படிப்படியாய் முன்னேற்றம் தரும் கொலு படிகள்..எப்படி வைக்க வேண்டும்?
யார் இந்த மகிஷாசுரன்
அரக்கர்களின் ராஜா தான் ரம்பன். அவனுக்கு பிரம்மனின் பூர்ண ஆசிர்வாதம் இருந்ததால் எல்லா மக்களையும் தேவர்களையும் அடக்கி ஆள ஆரம்பித்தான். ஒரு நாள் அவன் அழகான ஒரு பெண்ணை கண்டு காதலில் விழுந்தார். அந்த பெண் ஒரு எருமை உருவம் உடையவள். அவள் மகிஷினி என்ற பெயரை பெற்றாள். ரம்பனும் ஒரு ஆண் எருமையாக மாறி அவளையே மணந்து கொண்டான். ஆனால் அவன் விலங்காக இருக்கும்போதே மற்றொரு எருமை தாக்கி அவன் இறந்து போனான். மகிஷினி தன் கணவர் இறந்த பிறகு தானும் இறந்து விட வேண்டும் என்ற முடிவை எடுத்தாள். அந்த சமயத்தில் அவள் கர்ப்பமாக வேறு இருந்தாள். நெருப்பில் குதித்து அவளை மாய்த்து கொள்ள முடிவெடுத்தாள். அப்பொழுது தான் நெருப்பிலிருந்து ஒரு மனிதனின் உடலும் எருமை தலை உடைய அரக்கன் மகிஷாசுரன் என்ற மகனாக எழுந்து வந்தான். அவன் வந்ததும் அசுர குலத்திற்கு தலைமை ஏற்றான்.
வரம் பெற்ற மகிஷாசூரன்
மகிஷாசுரன் தன்னுடைய சக்தியை அதிகரிக்க பிரம்ம தேவனை நோக்கி பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். அவனுடைய தவத்தை மெச்சிய பிரம்ம தேவர் அவனது முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மகிஷனோ, இவ்வுலக ஆண்கள் யாராலும் தன்னை அழிக்க முடியாத வரம் வேண்டும் என்று கேட்டான். பெண் என்றால் அத்தனை இளக்காரமாக போய் விட்டது அந்த அசுரனுக்கு.
ஆட்டிப்படைத்த அரக்கர்கள்
அசுரர்கள் மொத்தம் எத்தனைபேர் தெரியுமா, மதுகைடபர், மகிஷாசூரன், தூம்ரலோசனன், சண்டமுண்டன், சும்பநிசும்பர், ரக்தபீஜன் என பல அசுரர்கள் இந்த மூவுலகத்தையும் ஆட்டிப்படைத்தனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என முப்பத்து முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர்.
துர்க்கை அவதாரம்
மும்மூர்த்திகளும் தங்களின் சக்தியைக் கொண்டு புதிய சக்தியை படைத்தனர். மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்த அன்னை துர்க்கையாக அவதாரம் செய்தார். அனைத்துத் தேவர்களின் ஒட்டுமொத்த வடிவமே துர்க்கை என்ற தகவலை தேவி மகாத்மியம் புராணம் விவரிக்கிறது. மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.
பூலோகம் வந்த அன்னை
அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள் அம்பிகை. அரக்கர்களின் வேலையாட்கள் சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது அரசனுக்கு ஏற்றவள் இவள்தான் என முடிவு செய்து தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அங்கேதான் விதி விளையாடியது.
அன்னையின் சபதம்
தேவியானவள் அப்போது, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன் என்றாள். அதற்கு சண்டனும், முண்டனும் தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா என்றனர். அதற்கு தேவி, தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் உன் அரசனிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும் என்றாள். அசுர வதத்திற்கான நாள் குறித்தாள் அம்பிகை.
ரத்தபீஜன்
தேவி சொன்னதை போய் சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும் இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. அதில், ரத்த பீஜன் என்று ஒரு அசுரன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான். அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரத்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது.
மகிஷாசுர சம்ஹாரம்
உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரத்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து இறந்து விடுகிறான். மும்மூர்த்திகளின் சக்தியோடும் அவர்களின் ஆயுதங்களுடனும் ஒன்பது பேராக அவதரித்த அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷாசுரனை வீழ்த்தி வெற்றித்திருமகளாக திகழ்ந்தாள். சும்பன், நிசும்பன்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள் அம்பிக்கை.
கொலுவாக நின்ற தேவர்கள்
மகிசாசூரனை அழிப்பதற்கு அம்பிகை அவதரித்தபோது தேவர்கள் தங்கள் சக்திகளை ஸ்ரீதேவியிடம் கொடுத்துவிட்டு பொம்மைப்போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைத்து வழிபாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அரக்கர்கள் போல நம் ஒவ்வொருவர் மனதிலும் தீய எண்ணங்கள் வடிவத்தில் அரக்கர்கள் இருக்கின்றனர்.
நம்முள் உள்ள அரக்கர்கள்
அந்த அரக்கர்களை அதாவது கெட்ட எண்ணங்களை அழிக்க அம்பிகை இச்சா சக்தியாக தூர்க்கையாக மூன்று நாட்கள் அவதரிக்கிறார். அந்த கெட்ட எண்ணங்கள் அழிந்த பின்னர் மூன்று நாட்கள் மகாலட்சுமியாக நமக்கு கிரியா சக்தியை அதாவது செல்வங்களை தருகிறாள் அன்னை.கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி நமக்கு ஞான சக்தியை அளிக்கிறாள் அன்னை. பத்தாம் நாள் தசமியன்று வெற்றி திருமகளாக நமக்கு மோட்சத்தை அடைய வழிகாட்டுகிறாள். பத்து நாட்களும் பூஜைகள் செய்து அன்னையை வழிபட்டால் நம்முள் இருக்கும் தீய எண்ணங்கள் அழிந்து நன்மைகள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
தமிழ்நாட்டில் அம்பு விடும் பண்டிகை
நவராத்திரி பண்டிகை தமிழ்நாட்டில் பத்து நாட்கள் கொலு வைத்து கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாள் அம்பு விடும் திருவிழாவாக பல ஊர்களில் நடைபெறுகிறது. அம்பிகை தன் கையில் உள்ள அம்பினை எய்து அரக்கனை அழிப்பதாக ஐதீகம். குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விஜயதசமி நாளில் மகிஷாசூர சம்ஹாரம் பத்தாம் நாள் கடற்கரையில் நடைபெறுகிறது.