ஆடி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 9ஆம் தேதி வரை புனித நீராடவும் தர்ப்பணம் தரவும் தடை
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும் திதி தர்ப்பணம் தருவதற்கும் நான்கு நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி மாலை வரை அக்னிதீர்த்த கடற்கரையில் எவ்வித தர்ப்பண பூஜையும் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 12ஆம் தேதி வரைக்கும் சுற்றுலா பயணிகளுக்கு அறை வழங்கக்கூடாது என்று லாட்ஜ் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயம் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் புனித நீராடிவிட்டு காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள்.
காசி புனித பயணம் சென்றவர்கள் தெற்கில் அமைந்துள்ள இந்த ராமேஸ்வரத்திற்கு வந்து புனித நீராடுவது வழக்கும். இங்கு உள்ள அக்னி தீர்த்தமும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவேதான் காசி யாத்திரை சென்றவர்கள், ராமேஸ்வரத்திற்கு சென்று தனுஷ்கோடியில் தீர்த்தமாடி ராமேஸ்வர லிங்கத்தை வழிபடுகின்றனர்.
தப்பாட்டம் ஆடிய ரோஜா.. உற்சாகமூட்டிய கலைஞர்கள்.. சொந்த தொகுதியில் செம்ம!
ராமேஸ்வரம் கோயில் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் அக்னி தீர்த்தம் எனப்படும் சமுத்திரத்தில் நீராடி விட்டுத்தான், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களை குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த அக்னி தீர்த்த கரையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடலின் கீழ் உள்ள மூலிகைகள் கடல் மேல் மட்டத்துக்கு வந்து சேது கரையில் மட்டுமே ஒதுங்குவதையும் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர். கயிலாய மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தமும், சேது தீர்த்தமும் தனுஷ் கோடியில் சங்கமம் ஆவதாக நம் முன்னோர்கள் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.
தலம், தீர்த்தம், மூர்த்தி என்ற முப்பெரும் சிறப்புக்களை உடையது ராமேஸ்வரம்.ராமேஸ்வரம் ராமநாதர் கோவில் ராமபிரானால் எழுப்பப்பட்ட பெருமையுடையது. இத்தலத்து கோவிலில் எழுந்தருளியுள்ள ராமநாதப் பெருமானுக்கு நாள்தோறும் கங்கையிலிருந்து கொண்டுவரப்படும் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படுவது தனிச்சிறப்புடையது. ராமநாதருக்கு அபிஷேகம் செய்வதற்காகவே இத்தலத்தில் பிரத்யேகமாக 1008 அபிஷேகச் சங்குகள் உள்ளன. ராமேசுவரம் கோவிலில் முழுக்க, முழுக்க மூலிகைகளால் உருவாக்கப்பட்ட புதுமையான ஒரு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு வைணலிங்கம் என்றுபெயர்.
ராமேஸ்வரம் தலத்திற்கு வந்து புனித நீராடி விட்டு மனம் உருகி ராமநாதசுவாமியை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியடையும் திருமண தடைகள் நீங்கும் புத்திர பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன்காரணமாகவே அமாவாசை நாட்கள் மட்டுமல்லாது சாதாரண தினங்களிலும் ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்கின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த சில நாட்களாகவே சாமி தரிசனம் செய்யவும் கடலில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயமும் மூடப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை வரும் 8ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் புனித நீராடவும் தர்ப்பணம் அளிக்கவும் அரசு அனுமதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின், சுகாதார அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர்கள் பாலன், நிஜாமுதீன் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் சங்க தலைவர் சந்திரன், பாலா, அயோத்தி உள்பட உறுப்பினர்களும், துறைமுக வீதி வர்த்தக சங்க தலைவர் ராஜாமணி, நாகேந்திரன் மற்றும் உறுப்பினர்களும், புரோகிதர்கள் சங்க பொறுப்பாளர்கள் ரமணி, கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ராமேசுவரம் பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாசில்தார் மார்ட்டின், வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி மாலை வரை அக்னிதீர்த்த கடற்கரையில் எவ்வித தர்ப்பண பூஜையும் செய்யக்கூடாது என்று கூறினார்.
வரும் 12ஆம் தேதி ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்றைய தினமும் அக்னித்தீர்த்த கடற்கரையில் தர்ப்பண பூஜைக்கு அனுமதி கிடையாது என்றார். உத்தரவை மீறி லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிற நாட்களில் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொருட்கள் வழங்க வேண்டும் என்று வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அப்போது கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக அனைத்து சங்கத்தினரும் தெரிவித்தனர்.