ஆடி அமாவாசை 2021 : பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களை வரவேற்க தயாராவோம்
அமாவாசையன்று திதி தர்ப்பணம் கொடுப்பதால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து வரவேற்
சென்னை:
முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடும் ஆடி அமாவாசை இந்த ஆண்டு ஆடி மாதம் 23ம் தேதி ஆகஸ்ட் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை கடைப்பிடிக்கப்படுகிறது. அமாவாசை திதி ஆகஸ்ட் 7ம் தேதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி இரவு 7.56 மணி வரை அமாவாசை நீடிக்கிறது. பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வரத்தயாராகும் முன்னோர்களை ஆடிஅமாவாசை நாளில் வரவேற்க தயாராவோம்.
முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் கூட வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் திதி கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும் என்பது மரபு.
அரசு வேலை வாங்கி தருவதாக முகநூலில் விளம்பரம்.. ரூ 25 லட்சம் மோசடி.. இளைஞர் கைது.. விசாரணையில் திடுக்
பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பித்ருக்கள் அனைவரும் பூமியில் ஒன்று சேருவதாக ஐதீகம். அன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடையச்செய்து, அவர்களுடைய ஆசிகளைப் பெற வேண்டும். தை அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்கள் பித்ருலோகத்துக்குத் திரும்பிச் செல்கின்றனர். அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பும் விதமாக தை அமாவாசையன்று நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு வரவேற்பு
நம் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். அதுவே நம்முடைய முன்னோர்கள் வந்தால் அவர்களுக்கு பிடித்தமானவைகளை கொடுத்து வழிபட வேண்டும். பித்ருக்களுக்கு தேவையானவைகளை கொடுப்பதன் மூலம் நமக்கு வரும் துன்பங்கள், பிரச்சினைகள் தீர்ந்து விடும். நம்மை காண்பதற்காக பித்ருலோகத்தில் இருந்து பூலோகம் வரும் முன்னோர்களுக்கு நாம் கொடுக்கும் தர்ப்பணமே அவர்களை மகிழ்விக்கிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலையில் நீராடி, பின்னர் சிவாலயத்தில் சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம். நம்மால் இயன்ற அளவு அன்னதானம் கொடுப்பது சிறப்பு. நம்மை பாதுகாத்த முன்னோர்களுக்காக தர்பணம் அளித்து ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் பரம்பரை பரம்பரையாக நமக்கு நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை. பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது நலம். இவ்வாறு தர்பணம் அளிக்காவிட்டால் முன்னோர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறது சாஸ்திரம்.
பித்ரு கர்மா
பாவங்களில் மகா பாவமாக சொல்லப்படுவது, நம்மைப் பெற்றவர்களையும் நம்முடைய முன்னோர்களையும் அன்புடனும் பொறுப்புடனும் கவனிக்காமல் இருப்பதுதான். அவர்கள் உயிருடன் இருக்கும்போது கவனிக்காமல் இருப்பது மகா பாவம் என்றால் அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து பித்ரு கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பது மகா மகா பாவம் ஆகும்.
காகம், பசுவிற்கு உணவு
அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்து விட்டு வீட்டில் சமைத்த உணவை காகத்திற்கு வைக்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்