மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் 50வது ஆடிப்பூர திருவிழா - திருவண்ணாமலை பராசக்திக்கு வளைகாப்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 50ஆவது ஆண்டு ஆடிப்பூரம் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்ற இந்த விழா அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 50வது ஆண்டு ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்ற இந்த விழாவில் சித்தர் பீட தலைவர் பங்காரு அடிகளாரும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரும் ஆதிபராசக்தி அம்மனுக்கும் சுயம்பு அன்னைக்கும் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.
ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆடிப் பூர விழா ஆண்டுதோறும் 3 நாட்கள் நடைபெறும். கடந்த புதன்கிழமை தொடங்கியது. அன்று அதிகாலை கருவறையில் உள்ள மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் யாக சாலை பூஜை, விளக்குப் பூஜை, வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார்.
இலங்கையை மிரட்டும் டெல்டா...இந்தியாவை விட 3 மடங்கு வீரியம்-ஒருநாள் கொரோனா மரணங்கள் 100ஐ தாண்டியது!
உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் இந்த காலங்களில் தான் வரும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு 50வது ஆடிப்பூரம் விழா நடைபெற்றது. கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் ஆடிப்பூரம் விழா கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் நாளில் வேள்வி பூஜைகள் நடைபெறும் பக்தர்கள் கஞ்சிக்கலயம் சுமந்து வந்து அன்னையிடம் வேண்டுதல் வைப்பார்கள். பாலபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆடிப்பூரம் விழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போல தூத்துக்குடியில் உள்ள ஆதிபராசக்தி பீடத்தில் இன்று அம்மனுக்கு ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அருணாச்சலேஸ்வரர் கோவில் ஆடிப்பூரம் விழா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறு காலை, மாலை வேளைகளில் உற்சவர்கள் விநாயகர், பராசக்தி அம்மன் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். இந்த நிலையில், ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை 11.30 மணி அளவில் பராசக்தி அம்மன் கோவில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரிக்கு பின்னர் அம்மன் வளைகாப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாரதனையும் நடைபெற்றன.
பராசக்தி அம்மனுக்கு, சிவாச்சாரியார்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருச்சியில் வளையல் அலங்காரம்
திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருக்கோயிலில் வீற்றிருக்கும் மங்களாம்பிகைக்கு, பால், இளநீர், சந்தனம், குங்குமம், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வளையல் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
500 டஜன் வளையல்கள்
மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், அஷ்டாதசபுஜ துர்கா மகாலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்வு, கோயிலில் நடைபெற்றது. அப்போது, துர்கா மகாலட்சுமிக்கு 500 டஜன் வளையல்கள் மாலையாக அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பஞ்சமுக தீபாராதனை, மகா தீபாராதனை, அஷ்டோத்திர சத நாமாவளி அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. கொரோனா தடை காரணமாக, நிகழ்ச்சியில் ஆலய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.