மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமியின் அருள் வீடு தேடி வரும் - அட்சய திருதியை ஸ்பெஷல்
சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமி அருள் தினமும் கிடைக்கும்.
சென்னை: வரவு செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமி அருள் தினமும் கிடைக்கும். அட்சய திருதியை நாளான இன்றைய தினம் குபேர பகவானின் ஆலயங்களை தரிசிக்கலாம்.
வற்றாத செல்வ வரம் தரும் அஷ்டதிக் பாலகர்களில், குபேரனும் ஒருவர். ஒருமுறை தன்னுடைய சகல நிதிகளையும் இழந்து கஷ்டப்பட்டபோது, அவன் ஈசனிடம் வேண்டி நின்றான். ஈசன் அருளால் சகல செல்வங்களும் கிடைத்தது. அப்படி ஈசனை குபேரன் பூஜித்த, தரிசித்த கோயில்களுக்கு நாம் சென்று வரும்போது, நமக்கும் வறுமை தீர்ந்து செல்வம் பெருகுகிறது.
1,50,000 டோஸ் ரஷ்ய கொரோனா தடுப்பூசி இந்தியா வந்து 2 வாரம் ஆச்சு.. இன்னும் அனுமதி தராத பின்னணி என்ன?
குபேரன் வறுமையில் தள்ளப்படுவதற்கும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும் இடைப்பட்ட நேரத்தில் மிகத் தீவிரமாக ஈசனை நோக்கியோ அல்லது மகாவிஷ்ணுவை நோக்கியோ தவமிருந்து பூஜிக்கப்பட்ட லிங்கங்களோ, மூர்த்தங்களோ பின்னாளில் கோயிலாக மாறியிருக்கின்றன.
குபேரன் எந்த நோக்கத்திற்காக தன்னுடைய தபோ பலத்தை, தவச் சக்தியை வளர்த்தானோ அந்த சக்தியும் அதே நோக்கத்தோடேயே அங்கும் செயல்படும். நான் என்ன வேண்டிக் கொண்டேனோ அதை இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கும் கொடு என்றுதான் ஈசனிடம் கோரிக்கை வைக்கிறான். எனவே, அவனால் பூஜிக்கப்பட்ட தலங்களுக்கு சென்று வழிபட செல்வ வளம் பெருகும்.
திருவண்ணாமலை குபேர லிங்கம்
அருணாசல மலையை கிரிவலமாக வரும்போது குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். இங்கு இது ஏழாவது லிங்கமாக விளங்குகிறது. இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். எனவே, பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் இந்த லிங்கத்தை வழிபட செல்வ வளம் பெருகும்.
திருச்சி - திருவானைக்காவல் குபேர லிங்கம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்ததும் எதிரே குபேர லிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கம் மகாலட்சுமியிடமிருந்து குபேரன் தவமிருந்து பெற்றதாக புராணங்கள் பகர்கின்றன. தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் தவமியற்றினான். ஈசனோ, உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது மகாலட்சுமியின் அருளால்தான் உள்ளது என்று சொல்லி மறைந்தார். குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இன்றும் குபேர லிங்கத்தினை சுக்கிர ஹோரையில், அர்ச்சித்து வெண் பட்டாடை சமர்பித்து வழிபட வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
தஞ்சபுரீஸ்வரர்
தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட 88 கோவில்களில் இந்த கோவில் ஒன்றாகும். எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து, சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். சுயம்புவாக தோன்றிய அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார். சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார். இதனால் இந்த தலம் ஸித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈசனிடமிருந்து வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு சிவபெருமானை வேண்டிக் கொண்டான். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் தஞ்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள்
குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். அவன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். ஆனாலும் தான் செல்வப் பெருவேந்தன் என்று கர்வத்தோடு அலைந்தான். கயிலாயத்திற்கு வந்தான். ஈசன் உமையோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததை கண்டான். சித்த விகாரத்தால் உலகாளும் அன்னையென்று பாராமல் அழகை ரசித்தான். சட்டென்று சுதாரிப்பதற்குள் ஈசனுன், உமையும் அவன் மனதறிந்தனர். இவனும் வெட்கித் தலைவணங்கினான். ஆனாலும், அவன் கர்வத்தை அழித்து, சித்தத்தில் சுத்தமுண்டாக்க உமையன்னை சினம் கொண்டாள். 'உன் உருவம் விகாரமடைந்து, உன்னிடமுள்ள நவநிதிகளும் உன்னைவிட்டகல வேண்டும்' என்று சபித்தாள். குபேரனை விட்டு நவநிதிகளும் அகன்றன. அவனை விட்டகன்ற நிதிகள் தன்னை வைத்துக்கொள்வார் யாருமின்றி பெருமாளை வேண்டி பொருநை நதி நீராடி, பிரார்த்தித்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப் பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று.வேறொரு புறம் குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்பு கோரினான். 'நான் உன்னை சபித்தவாறே உன் மேனியின் விகாரம் மறையாது. ஒரு கண்ணும் தெரியாது. ஆனால், நீ இழந்த பெருஞ் செல்வங்களின் சாரமான நவநிதிகளும் தாமிரபரணிநதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்மபிசுன க்ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன,' என்றார். திருக்கோளூர் வந்தவன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்து மன்றாடினான். திருமால் மனமிரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இங்கு தீர்த்தமே குபேர தீர்த்தம்தான். நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் இதுவொன்றாகும். இத்தலம் நெல்லைக்கு அருகே உள்ளது.
திருத்தேவூர் ராவணன்
குபேரனோடு போரிட்டு குபேரனுடைய சங்கநிதி, பதுமநிதி என்கிற நிதிக் கலசங்களை எடுத்துச் சென்றான். இதை வைத்துக் கொண்டிருந்தால்தான் அவனே குபேரன் ஆவான். இதனால் குபேரன் தன்னுடைய குபேர ஸ்தானத்தை இழந்தான். இத்தலத்தில் அருளும் தேவபுரீஸ்வரரை குபேரன் செந்தாமரை புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபட்டான். ஈசனின் அருளால் ராவணனிடமிருந்து குபேர கலசங்களை திரும்ப பெற்று மீண்டும் குபேர பட்டத்தை பெற்றான். பெரும் பணக்காரர்களாக இருந்து மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டோர்கள் இத்தல நாயகரான தேவபுரீஸ்வரரையும், அம்மையான மதுரபாஷினியையும் வழிபட, செல்வச் செழிப்போடு வாழ்வர் என்பது உறுதி. திருவாரூர் - நாகப்பட்டிணம் சாலையிலுள்ள கீவளூர் எனும் தலத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.
வாலாஜாபேட்டை குபேர தலம்
வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் லட்சுமி குபேரருக்கு ஆலயம் அமைந்துள்ளது. இதே போல ரத்னமங்கலத்தில் குபேர ஆலயம் அமைந்துள்ளது. வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். மகிழ்ச்சியாக இருங்கள் மகாலட்சுமி அருள் தினமும் கிடைக்கும்.