திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..4 கி.மீ நீள க்யூ..ஏழுமலையானை தரிசிக்க 15 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி: உலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை, 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதிகளவில் பக்தர்கள் வருவதால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இலவச தரிசனம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரிடையாக வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் நேரடி இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டது. தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

பல மணி நேரம் காத்திருப்பு
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் என 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

15 லட்சம் டிக்கெட்டுகள்
இந்த நிலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 21ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
மொத்தம் 61 நாட்களுக்கு 15.25 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 1மணிநேரத்தில் 15 லட்சம் டிக்கெட்டுகளை பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர்.

பாத யாத்திரை வரும் பக்தர்கள்
தமிழக பக்தர்கள் நடைபாதை வழியாக தரிசனத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். இதனால் பக்தர்களை தங்கவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 குடோன்களிலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

15 மணி நேரம் காத்திருப்பு
கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பலமணி நேரம் காத்திருந்தாலும் ஏழுமலையானை தரிசிக்கும் நொடியில் களைப்பு பறந்து விடும் என்பது நம்பிக்கை. திருப்பதியில் நேற்று 73,358 பேர் தரிசனம் செய்தனர். 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.11 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.












Click it and Unblock the Notifications