குழந்தை பாக்கியம் தரும் கோதூளி லக்ன காலம்...!
அனைத்து செல்வங்களும் வழங்கும் மகாலக்ஷமியை வணங்க மகத்தான கோதூளி லக்னகாலம்.
-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயனம் ஆரம்பிக்க சில நாட்களே உள்ள நிலையில் உத்திராயண கோதூளி லக்ன காலத்தில் கோபூஜை மற்றும் மகாலக்ஷமி பூஜை செய்து வர மகத்தான பலன்கள் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
தினமும் காலை சூரிய உதயத்திற்க்கு முக்கால் மணி நேரம் முன்பும் அதாவது சூரிய உதயத்திற்க்கு இரண்டு நாழிகை முன் மற்றும் மாலை சூரிய அஸ்தமன நேரம் முதல் 2 நாழிகைக்குள்(6.00pm - 6.45pm) கோதூளி நேரம் என்று பெயர்.
"கோ" என்றால் பசு, "தூளி" என்றால்
பசுவின் இருப்பிடமான கொட்டில் அல்லது கொன்டகை ஆகும்.
சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இது உதய கால கோதூளி லக்னம் எனப்படும்.
உதய கால கோதூளி லக்னம் குருவின் ஆதிக்கம் நிறைந்தது என "காலப்ரகாசிகா" எனும் ஜோதிட நூல் சிறப்பாக கூறுகிறது. இவ்வேளையில்
செய்யும் பூஜை, மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, "பிரம்ம முகூர்த்தம்' என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.
ஸாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது முகூர்த்த சாஸ்திரம்.
பசுவின் கழுத்தில் மணி கட்டி இருக்கும். அந்த மணி சத்தத்துடன் வயிறார உண்ட மகிழ்ச்சியுடன் மண் "தூசி" பறக்க தன் இருப்பிடம் வந்து சேரும் நேரம் அஸ்தமன கால கோதூளி லக்னம் எனப்படும்.இந்த நேரம் மகாலெட்சுமி வரும் நேரம் என்பார்.
அஸ்தமன கால கோதூளி லக்னம் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்ததாகும்.
இந்த மஹாலட்சுமி நேரம் கோதூளி லக்னம் எனும் கோதூளி முஹூர்த்தத்தில் வீட்டை சுத்தம் செய்து நாமும் சுத்தமாக முகம் கைகால் அலம்பி விளக்கேற்றிவைத்து ஊதுபத்தி மணம் பரப்பி மகாலக்ஷமியின் ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ அன்னபூர்னாஷ்டகம், சப்த கன்னி
தேவியர் ஸ்தோத்திரங்கள் ஆகியவை படித்து ஸ்ரீமகாலக்ஷமியை வரவேற்பது தாரித்ரியத்தை போக்கி சகல சௌபாக்கியங்கலும் கிட்டும்.
திருமண தடை நீங்கி திருமணம் விரைவில் நடைபெற:
நமது நாட்டில் 'கோ' எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம். பெண்களுக்கும் பசுவிற்க்கும் காரகர் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். கோதூளி லக்னகாலத்தில் திருமண தடை இருப்பவர்கள் பசுமாட்டிற்க்கு வெல்லம் கலந்த சாதம் உணவாக அளித்து மூன்று முறை வலம் வந்து வணங்க திருமண தடையகலும்.
குழந்தை பாக்கியம் பெற:
பசுவின் சிறப்பை விளக்கும் விதமாக ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவை கோபாலனெ என புரான இதிகாசங்கள் போற்றுகின்றன.
குழந்தை பாக்கியம்பெற விரும்புபவர்கள் கோதூளி முகூர்த்த காலத்தில் கோபூஜை செய்து ஸ்ரீ சந்தான கோபாலனை மனதில் நிறுத்தி
கீழ்கண்ட மந்திரத்தை கணவன் மனைவி இருவரும் கூறிவர சுக்கிர தோஷம் மற்றும் புத்திர தோஷம் நீங்கி
விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என பாரம்பரிந ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
"ஸ்லோகம்
ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீ சுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
தேவதேவ ஜகந்நாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யசஸ்வினம்"
தாரித்ரியம் விலகி சகல செல்வங்கலும் கிட்ட:
கோதூளி லக்னத்தில் கோபூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜைசெய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும்.
நிலை யான லாபம் கிட்டும். பசுவின் உடலில் சகல தேவர்களும், ஐஸ்வரியம் இருக்கிறது என்று நம் வேத சாஸ்திரம் கூறுகிறது. இந்த நேரத்தில் எல்லா சுப காரியங்கள் செய்யலாம் கிரக தோஷம் எதுவும் செய்யாது. இந்த நேரத்தில் பிறப்பவர் மற்றவரை அடக்கி ஆளுவார், கலை ஞானம் உடையவர், அறிவியல் அறிஞர், உலகை ஆளும் தகுதி உடையவர்.
தேவர்களின் கோதூளி முகூர்த்தம்:
உத்திராயண காலத்தை தேவர்களின் பகல் பொழுது எனவும் தக்ஷிணாயன காலத்தை தேவர்களின் இரவு பொழுது எனவும் வேதங்களும் இதிகாசங்களும் போற்றுகின்றன.ஆஷாட மாதம் எனும் ஆனி மாதம் உத்திராயணத்தின் கடைசி பகுதியான மாலை பொழுதாகும். எனவே ஆஷாட மாதத்தை தேவர்களின் கோதூளி முகூர்த்த காலம் எனப்படுகிறது.