குரு பெயர்ச்சி பலன் 2021: குரு பகவானால் ஆரோக்கியம் செல்வ வளம் பெறப்போகும் ராசிக்காரர்கள் நீங்கள்தான்
குருபகவான் தற்போது அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சரித்தாலும் வக்ரமடைந்து மீண்டும் வக்ரமடைந்து மகர ராசியில் சனியோடு பயணிப்பார். நேர்கதியில் நவம்பர் 20ஆம் தேதி கும்ப ராசிக்கு பயணம் செய்வார்.
சென்னை: குருபகவான் பொன்னவன். தனது பொன்னான பார்வையால் பலன்களை அள்ளித்தருவார். இப்போது அதிசாரமாக கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் செப்டம்பர் 14ஆம் தேதி வக்ர கதியில் மகர ராசிக்கு திரும்புகிறார். பின்னர் நேர்கதியில் மீண்டும் கார்த்திகை 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி 2022ஆம் ஆண்டு வரைக்கும் பயணம் செய்வார் குருபகவான். இந்த குருவின் பயணம் சஞ்சாரத்தினாலும் குருவின் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
Recommended Video
பயோலாஜிக்கல் இ தடுப்பூசி... 30 கோடி டோஸ்களுக்கு ஆர்டர்.. மத்திய அரசு அதிரடி.. பற்றைக்குறை நீங்குமா?
கும்ப ராசியில் அமரும் குரு பகவான் இந்த முறை மகர ராசிக்கு இரண்டாம் வீடு, துலாம் ராசிக்கு ஐந்தாம் வீடு, சிம்ம ராசிக்கு ஏழாம் வீடு, மிதுன ராசிக்கு ஒன்பதாம் வீடு, மேஷ ராசிக்கு பதினொன்றாம் வீடு என பயணம் செய்கிறார். குரு எந்த இடத்தில் அமர்ந்தாலும் அவர் பார்க்கும் இடங்களினால் பலன் கிடைக்கும். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் வீடுகளின் மீது விழுகிறது.
"ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்பது பழம் பாடல் இதில் சொன்னது போல நடக்கும் என்று சொல்ல முடியாது. ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை, தசாபுத்தி படியும் நன்மைகள் தீமைகள் நடைபெறலாம்.
கெட்டிமேளம் கொட்டும் நேரம்
மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் சிலருக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் ஜோடிகளுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கை கூடி வரும். மாணவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று கல்வி பயில நன்மை செய்வார்.
பதவி தரும் குரு பகவான்
ரிஷப ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானால் குரு புதிய பதவி தேடி வரும் பத்தில் குரு வரும் போது உயர்பதவிகள் தேடி வரும். வாழ்க்கை ரீதியான பயணத்தில் வெற்றி கிடைக்கும். வேலை தொழிலில் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அஞ்ச வேண்டாம். ஆளுமை தன்மையை அதிகரிப்பார். வீழ்ச்சியில் இருந்தவர்களை உச்சத்திற்கு கொண்டு வருவார். குரு பகவான் தன்னுடைய ஐந்தாம் பார்வையால் குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குருவின் பார்வையால் பிரச்சினைகளை கஷ்டங்களை நிவர்த்தி செய்வார்
பாக்யங்கள் நிறைந்த குரு
மிதுன ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். குரு பாக்ய ஸ்தானத்தில் அமர்வது யோக காலம். கும்ப ராசியில் அமர்ந்த குரு மிதுன ராசியை பார்வையிடுகிறார். ராசியை பார்க்கும் குருவினால் ராஜயோகம் உங்களுக்கு காத்திருக்கிறது. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானம், ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வையிடுவார். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்வீர்கள். உங்களின் பூர்வ புண்ணியத்தின் மூலம் நன்மைகள் அதிகம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். அவர்களின் கல்வி நிலை உயரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். கல்வி ஸ்தாபனம் நடத்துபவர்களுக்கு நன்மை நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ரொம்ப புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் தீரும்.
அஷ்டம குரு கஷ்டங்களை நீக்குவார்
குருபகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் கவலை வேண்டாம். நன்மை தருவார். கண்டச்சனியின் சனியின் பிடியில் இருக்கும் கடக ராசிக்காரர்களை கஷ்டங்களில் இருந்து விடுவிப்பார். குரு பகவான் பொருளதார வளர்ச்சியை தருவார் ஆனந்தத்தை அள்ளித்தரப்போகிறார். பணமழை உங்க வீட்டில் கொட்டப்போகிறது. குரு உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களை பார்வையிடுகிறார். 12ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் நிறைய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் நிறைய வாங்குவீர்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். ராசிக்கு இரண்டாம் வீட்டை குரு பார்வையிடுவதால் வருமானத்திற்கு குறைவிருக்காது. உடல் ஆரோக்கியத்தோடு செல்வ வளமும் அதிகரிக்கும் வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த கசப்பான அனுபவங்கள் நீங்கும்.
யோகமான கால கட்டம்
சிம்ம ராசிக்காரர்களே குரு பகவான் தற்போது அதிசாரமாக ஏழாம் வீட்டில் பயணத்தினாலும் வக்ரமடைந்து ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கு வருகிறார். ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு கெடுதல் செய்ய மாட்டார் நன்மைதான் செய்வார். நவம்பர் மாதம் முதல் களத்திர ஸ்தானத்தில் நகர்கிறார் குரு பகவான். கடன் பகை நோய் ஸ்தானத்தில் இருந்து குரு களத்திரத்திற்கு நகர்வதால் கடன் நோய்களால் அல்லப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் நீங்கி நன்மை நடைபெறும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் எட்டாம் வீட்டு அதிபதியுமான குரு ஏழாம் வீட்டில் அமர்வதால் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சியினால் பொன்னான கால கட்டம் வரப்போகிறது.
ருண ரோக சத்ரு குரு
கன்னி ராசிக்கு கடன் நோய் எதிரி ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். நோய்களை சுட்டிக்காட்டுவார் குருபகவான். நோய்கள் பாடாய் படுத்தி எடுத்தாலும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் நன்மையே நடைபெறும். கடன் வாங்க நேரிடும். வீடு, சொத்து சேர்க்கலாம். கடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் நலனின் அக்கறை தேவை. அளவிற்கு மீறி கடன் வாங்க வேண்டாம். நோய்களை பயப்பட வேண்டாம். எதையும் எதிர்த்து போராடி வெல்வீர்கள். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது. குரு பார்வை உங்கள் ராசிக்கு 2ஆம் வீட்டின் மீது விழுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன்களை தீர்க்க வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள்.
குரு பார்வையால் குதூகலம்
நிகழப்போகும் குரு பெயர்ச்சி துலாம் ராசிக்கு மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது. குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த குருபெயர்ச்சியில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. குல தெய்வத்தை காட்டும் இடம். ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு. திருமணம் நடைபெறும். குழந்தை பேறு கிடைக்கும். திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.
கவலைகள் தீரும் காலம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் நன்மைகள் நடைபெறும். நான்காம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். நோய்கள் நீங்கும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். தொழில் செய்ய இடம் கிடைக்கும். கவலைகள் நீங்கும் காலம். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். நல்ல சம்பளத்தில் நிரந்தரமான வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். குரு பார்வையால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கண்டங்கள் விலகும் கவலைகள் நீங்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவான் மந்திரம் கூறி வணங்கலாம்.
தடைகளை தாண்டி முன்னேற்றம்
குரு பகவன் உங்கள் ராசி அதிபதி. ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பகவானால் புதிய மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் விலகி சுபிட்சம் நடைபெறப்போகிறது. தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை நடக்கிறது. இனி குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடைபெறப் போகிறது. மூன்றாம் வீட்டில் அமர்ந்து குரு உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியவர்கள் மனம் மாறி ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுமணம் கை கூடி வரும்.
மகரம் செல்வாக்கு உயரும்
மகர ராசிக்காரர்களே ஏழரை சனியில் ஜென்ம சனி நடந்து கொண்டுள்ளது. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். பணவரவு அதிகமாகும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடன் தொல்லைகள் தீரும். குரு தனது ஏழாம்பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடி வரும்.
சுப காரியம் கை கூடி வரும்
குரு பகவான் ஜென்ம குருவாக கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் எல்லையில்லாத வெற்றிகளைத் தருவார். குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. குரு பார்வையால் உயர்பதவி கிடைக்கும், புதிய முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடி வரும். கணவன் மனைவி இடையேயான உறவு பலமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்களின் உயர்கல்வி யோகம் கை கூடி வரும்.
சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்
குரு பகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மீன ராசிக்காரர்களுக்கு விரைய குருவாக இருந்தாலும் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும். வருமானம் பெருகும். நல்ல வேலை வாய்ப்பு பெருகும். இதுநாள் வரை நீங்கள் வாங்கிய கடன்கள் அடைபட போதுமான வருமானம் வரும். முடங்கிய தொழில்கள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிள்ளைகளின் சுப காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.
குறைவற்ற செல்வம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இப்போது கொரோனா தொற்றினால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. குருவின் பயணம் அதிசாரம், வக்ரம் என மாறி மாறி சஞ்சாரம் உள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல் குருவானவர் கால புருஷ தத்துவப்படி 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணிப்பதால் உலக மக்கள் பலருக்கும் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். செல்வ வளம் பெருகும். வியாழக்கிழமைகளில் குருவை நினைத்து வணங்க குரு பகவானின் ஆசி கிடைக்கும்.