குரு பெயர்ச்சி பலன் 2021: மேஷ ராசிக்கு லாப குருவால் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்
தொழில் ஸ்தானத்தில் பயணித்த குரு லாப ஸ்தானத்தில் பயணிக்கப்போவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு யோகங்களும் அதிர்ஷ்டங்களும் தேடி வரப்போகிறது.
சென்னை: பிலவ வருடம் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி சுப கிரகமான குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குருப்பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணிக்கப்போகிறார். லாப குருவினால் அதிர்ஷ்டங்களும் யோகங்களும் கிடைக்கப்போகிறது. சுய ஜாதகத்தில் குரு சரியான இடத்தில் அமர்ந்து தசாபுத்திகளும் சிறப்பாக இருந்தால் இந்த குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது.
காலப்புருஷ தத்துவப்படி லாப ஸ்தானத்தில் குரு பகவானும் பத்தாமிடத்தில் சனி பகவானும் சஞ்சரிக்க உள்ளார்கள்.
கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ள குருபகவான் இந்த முறை மிக அதிவேகமாக கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்களான அவிட்டம் நட்சத்திரம் 3,4 ஆம் பாதங்களையும், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்களையும் கடந்து ஏப்ரல் 3ஆம் தேதி மீன ராசியை அதிசாரமாக சென்றடைகிறார்.
மேஷ ராசிக்கு 9 ஆம் இடத்திற்கும்,12ஆம் இடத்திற்கும் அதிபதியான குருபகவான் 11ஆம் இடத்தில் அமர்ந்து விரையங்களையும்,அலைச்சல்களையும் குறைத்து லாபங்களை வாரி வழங்கி மிக உன்னதப்பலன்களை வழங்க உள்ளார்.

லாப குருவின் பார்வை
மேஷ ராசியினருக்கு சுப பலனை வழங்க கூடிய ஏதுவான இடமான 11ஆம் இடத்தில் சஞ்சரித்து அதிவேகமாக பயணிக்க உள்ளார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள குரு பகவானுக்கு இடம் கொடுத்த சனி ஆட்சி பெற்று இருப்பது ஒரு வகையில் சிறப்பானது. சுப கிரமான குரு தான் இருக்கும் இடத்தை விட தான் பார்வை செய்யும் இடத்தின் பலனை விருத்தி செய்வார். மேஷ ராசிக்கு 11 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள குரு பகவான் தனது பார்வையினால் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான மிதுன ராசி, ஐந்தாம் இடமான சிம்மராசி, ஏழாம் இடமான துலாம் ராசிகளைப் பார்வையிடப்போகிறார்.

முயற்சிகளில் வெற்றி
குருபகவான் மேஷராசிக்கு மூன்றாமிடமான மிதுன ராசியை தனது 5 ஆம் பார்வையால் பார்ப்பதால் உங்களின் தைரியம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர் சகோதரிக்கு முன்னேற்றம் வரும். திருமணம் போன்ற சுபகாரியம் நிகழும். சிறு தூரப் பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு ஆன்மீக உபதேசம் கிடைக்கும். வலது காதில் பிரச்சனை இருந்தால் நீங்கும். மாமனாருடன் மனகசப்பு இருந்தால் அகலும். அவருடன் சுமூக உறவு ஏற்படும். அவரால் ஆதாயம் ஏற்படும். புதிய கல்வி கலைகளை கற்றுக்கொள்வீர்கள். முன்னோர் கடன் செய்யாமல் விடுபட்டு இருந்தால் செய்யாதோர் இந்த காலத்தில் செய்ய வாய்ப்பு வரும்.

பிள்ளைகளால் சந்தோஷம்
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேற்றமும் வளர்ச்சியும் ஏற்படும். குழந்தைகளுக்கு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி ஏற்படும். வாரிசுகளுக்கு படிப்பிலும்,தொழிலும்,ஆரோக்கியத்திலும் முன்னேற்றம். வாரிசுகளை பிறர் பாராட்டுவதால் மன மகிழ்ச்சி. குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு வாரிசு ஏற்படும்.
குல தெய்வ வழிபாடு செய்வதால் குலதெய்வ அருள் கிடைத்து அதனால் முன்னேற்றம்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்
பூர்வீக சொத்து விற்பனை அல்லது நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த பூர்வீக சொத்து கிடைக்கும். திட்டமிட்ட செயல்களும்,இதுநாள் வரை நிறைவேறாமல் இருக்கும் திட்டங்களும் விரைவாக நிறை வேறும். தந்தை வழி தாத்தாவின் உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தாய் மாமனுக்கு முன்னேற்றமான பலன் ஏற்படும். தாய் மாமன் வீட்டில் இருந்த பிரச்சனைகள் தீரும் அவர் வீட்டில் சுப நிகழ்ச்சி அல்லது தாய் மாமனுக்கு திருமணம் நடைபெறும்.சிலருக்கு பங்குச்சந்தை மற்றும் ரேஸ் மூலம் லாபம் கிடைக்கும்.சிலருக்கு மந்திர உபதேசமும்,தெய்வ கடாட்சம் கிடைக்கும். வயிறு, இருதயத்தில் இருந்த நோய்கள் தீரும்.

சுப காரியம் நடைபெறும்
குரு பகவான் தனது 9ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தை பார்வையிடுகிறார். குரு பலன் வந்துள்ளதால் திருமணம் ஆகாதவருக்கு திருமணம் நடைபெறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்து இருந்த தம்பதியர் இணைவர். தந்தைக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும். கூட்டு தொழிலில் இருக்கும் பிரச்சனை அகலும். சிலர் கூட்டு தொழில் ஆரம்பிப்பார்கள். நண்பருடன் இருந்த மனகசப்பு அகலும் நண்பர்களின் உதவி கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு அதிசாரமாக செல்வதால் சுப செலவுகள் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications