கந்த சஷ்டி 2019: முருகன் ஆலயங்களில் விரதம் தொடங்கியது - நவ.2ல் சூரசம்ஹாரம்
தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில். இங்கு நடைபெறும் முக்கிய விழாவில் கந்த சஷ்டி விழாவும் ஓன்று. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று கோலகலமாக தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 3ஆம் தேதியன்று முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், தண்ணீரும் பழரசங்களும் மட்டும் குடித்து பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் பாலும் பழமும் சாப்பிட்டு கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
கந்த சஷ்டி விரதமருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம் இருக்கின்றனர்.
சஷ்டி விரத பலன்கள்
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
கந்த சஷ்டி விரத மகிமை
கந்த சஷ்டி விரதத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் அனுஷ்டிக்கின்றனர். மாணவர்கள் கல்விக்காகவும், திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் தொடங்கியுள்ளது.
கந்த சஷ்டி விரதம் தொடக்கம்
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2 வது படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில், கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடற்கரையில் சூரசம்ஹாரம்
அன்றைய தினம் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
வெற்றிக்கு திருக்கல்யாணம்
நவம்பர் 3ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி, கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மற்ற பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவில் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
விரதம் தொடக்கம்
முருகப்பெருமானின் முதல் படை வீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய சிறப்பு பூஜையில் வள்ளி, தெய்வானை சமேதரராக எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில், காப்புக்கட்டுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது விரதத்தை ஆரம்பித்தனர்.
பக்தர்கள் பரவசம்
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சஷ்டி விரதத்தை ஏராளமானோர் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, முருகனுக்கு சந்தன காப்பு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். மேலும், தங்களது விருப்பத்திற்கேற்ப 3 நாள் மற்றும் 6 நாள் விரதங்களைத் தொடங்கினர்.
கொடியேற்றத்துடன் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில், கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள தங்ககொடி மரத்திற்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்யப்பட்டது. பின்னர், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேவற்கொடி ஏற்றப்பட்ட போது பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி விரத பலன்கள்
கந்த புராணக் கதையை ''சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார்" என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் . சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனை வதம் செய்தார் என்பது இதன் பொருள். வெறும்கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும் என்பது பக்தர்கள் அனைவருக்கும் தெரியும்.