கார்த்திகை பிறந்தது: ஐயப்ப, முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர் - எங்கும் சரணகோஷம்
கார்த்திகை 1ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து ஐயப்பனுக்கும் முருகப்பெருமானுக்கும் விரதம் தொடங்கினர்.
மதுரை: கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு ஐயப்பனுக்கும், முருகப்பெருமானுக்கும் ஏராளமான பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். அதிகாலையிலேயே சாமியே சரணம் ஐயப்பா என்றும், முருகனுக்கு அரோகரா என்று சரணகோஷங்களை முழங்கி இறைவனை வழிபட்டனர்.
கார்த்திகை மாதம் என்றாலே இறை வழிபாட்டிற்கு உரிய மாதம். மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்குவார்கள். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கும், மூன்றாம் படை வீடான பழனிக்கும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக நடந்து செல்வார்கள்.

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் இருமுடி சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மரக விளக்கு தரிசனம் சிறப்பு பெற்றதாகும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1ஆம்தேதி மாலை அணிந்து விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் சொல்வது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. இதைதொடர்ந்து கார்த்திகை 1ஆம் தேதியான இன்று அதிகாலையிலேயே ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் புனித நீராடி கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
அனைத்து மாவட்டத்திலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசிமணி மாலை அணிந்து விரதம் தொங்கினர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முன்தினம் முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்கிச் சென்றனர். ஈரோடு மாநகர் பகுதியில் கடை வீதிகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் துளசிமாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை அதிகமாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர கருப்பு காவி கலர் துண்டுகள், வேட்டிகள் விற்பனையும் அதிகரித்தது. இதே போல திருப்பூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டானர்.
சென்னையில் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலில் ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். அதிகாலையிலேயே சரண கோஷம் முழங்கியது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதங்களும் இனி எங்கு பார்த்தாலும் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் ஒலிக்கும் ஆன்மீக அலைகள் வீசும். மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு பூஜைக்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்களும் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications