தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப விழா கோலாகலம்... முருகன், சிவ ஆலயங்களில் பக்தர்கள் தரிசனம்
திருச்சி மலைக்கோட்டை திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னை: தமிழகம் முழுவதும் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. வீடுகளில் 27 விளக்குகள் ஏற்றுவது ஐதீகம். 27 விளக்குகள் ஏற்றினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திருவண்ணாமலையில் மலை மீது மகா தீபம் ஏற்றிய உடன் அனைவரின் இல்லங்களிலும் தீபங்களை ஏற்றப்பட்டது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும்மலையின் நடு பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் கார்த்திகை மகா தீப திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப விழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.
237 அடி மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிபிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள சுமார் 30 அடி உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக் கொப்பரையில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டும், 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவைகளை கொண்டு தயார் செய்யப்பட்டது.
கடந்த ஆறு நாட்கள் முன்பாக தயாரிக்கப்பட்ட தீபத் திரியில் மாலை நேரங்களில் நான்கு நாட்கள் நல்லெண்ணெயில் உப்பு எண்ணெய் ஊற்றும் பணிகள் தொடர்ந்து ஊற்றப்பட்டது. இன்று இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் உதவி ஆணையர் ஜெயராணி கண்காணிப்பாளர் பிரகாசம் , பேஸ்கார் வேலாயுதம் உள்ளிட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.
இப்படி நடந்திருக்க கூடாது.. கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய 2 சம்பவங்கள்.. ரசிகர்கள் சோகம்!
கோவையில் தீபத்திருவிழா
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குட்டையூரில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாதேஸ்வரன் மலைக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று மதியம் மாதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனை பூஜைகளும் நடைபெற்றன. மாலையில் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த மகா தீபத்திற்கு சிவ மந்திரங்கள் முழங்க 100 கிலோ நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.
அச்சிறுப்பாக்கம் பசுபதீஸ்வரர்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை மகா தீப பெருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன், ஸ்ரீ பசுபதீஸ்வரர், ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ பைரவர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பின்னர், அச்சிறுப்பாக்கம் நகர வீதிகளில் மூல விளக்கு வலம் வந்து மலையில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தது. அதன் பின்னர், ஸ்ரீ பசுபதீஸ்வரர் கருவறையிலிருந்து மூல தீபம் ஏற்றப்பட்டு கோயிலின் எதிரே உள்ள மகா கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைவலம் வந்து இறைவனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து இன்று மாலை அகண்ட தீபம் ஏற்றுவதற்காக திருக்கழுக்குன்றம் முழுவதும் எண்ணெய் சேகரிக்கப்பட்டது. பின்னர் 6 மணிக்கு வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலில் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அப்போது மலைக்கோவிலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபத்தை தரிசனம் செய்தனர். மேலும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் மலைக்கோவிலில் அகண்டத்தில் ஏற்றபட்ட தீபத்தை தரிசித்து, அதன் பின்பு அவரவர் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், ஈஸ்வரர், அம்பாள், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலா வந்து அருள் பாலித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசூடேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை தீபத்தையொட்டி மலைக்கோவிலின் மீது திருக்கோடி தீபம் ஏற்று கோவிந்தா கோவிந்தா என்று முழக்கமிட்டு வழிபட்டனர். கார்த்திகை தீபத்தையொட்டி சந்திரசூடேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்ததுடன் வான வேடிக்கைகளுடன் வேண்டுதலை நிறைவேற்றினர்.
பழனியில் கோலாகலம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றான காத்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ம்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மகாதீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மலை மீதுள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளை கொண்டு செய்யப்பட்டிருந்த சொக்கபனையும் தீயிட்டு எரிக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளால் இன்று பிற்பகலுக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.