மார்கழி கோலத்தின் மகத்துவம் : கோலத்தின் மீது பூக்களை வைப்பது ஏன் தெரியுமா
மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்.தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாக மார்கழி
மதுரை: மார்கழி மாதம் மகத்துவமானது. அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அதே புத்துணர்ச்சியோடு வாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் பரங்கிப் பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் எந்த தெய்வத்திற்குத்தான் ஆசையிருக்காது. அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள். தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாக மார்கழி மாதங்களில் அழகிய கோலமிட்டு அந்த கோலத்தின் மீது பரங்கிப் பூக்களை வைத்து அழகுப்படுத்தும் வழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளது. பூசணிப்பூ வைத்து கோலமிட்ட வாசலை பார்த்தலே போதும், "வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா.... என்று இளைஞர்களின் மனது பாடத் தொடங்கி விடும்.
மார்கழி மாதத்தில் மட்டும் பரங்கிப்பூக்களை வைக்கிறார்களே மத்த 11 மாதங்களில் அந்த பழக்கம் இல்லையே என்று கேட்கலாம். மார்கழியில் பரங்கி மலர் வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை. அதோடு கன்னிப்பெண்கள் அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பது திருமணமாகாத இளைஞர்களுக்கு தரும் அறிவிப்பாகவே எடுத்துக்கொள்ளலாம். இந்த மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாகப் பூக்கும் என்பதால் இந்தப் பூவினை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள்.
கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். கோலங்கள் போடாத வீடுகளில் கூட மார்கழி மாதத்தில் கோலமிட்டு நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில் பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணிக்காய் பூவையாவது வைத்திருப்பார்கள். நம் வீட்டில் பூக்கும் எந்த பூ கிடைத்தாலும் அதை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது செம்பருத்திப்பூக்களை அதிகம் வைக்கின்றனர்.
கிருஷ்ணர் பாதுகாப்பு
இப்பழக்கம் பாண்டவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் பாரதப் போர் நடந்தபோது, பாண்டவர்கள் வீட்டையும் அவர்களைச் சார்ந்த போர்வீரர்களின் வீட்டையும் அடையாளம் தெரிந்துகொள்வதற்காக, அவர்கள் வீட்டு வாசலை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு ஊமத்தம்பூ வைப்பதற்கு ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தைக் கண்டு அவர்கள் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பை பகவான் கிருஷ்ணர் அளித்தார் என்று கூறப்படுகிறது. அன்று முதல் கோலத்தின் நடுவில் பூ வைக்கும் பழக்கம் தொடர்கிறது.
திருமணம் கைகூடும்
நம் பாரம்பரியத்தில், அந்தக் காலங்களில், மார்கழி மாதத்தில் எந்த வீட்டில், கோலம் போட்டு, சாண பிள்ளையார் பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப் பூவை வைத்து இருக்கிறார்களோ, அந்த வீட்டில் கன்னிப் பெண் இருக்கின்றாள் என்பதை குறித்தது. இதைப் பார்க்கும் மற்றவர்கள் அந்த வீட்டில் கல்யாணம் ஆகாத பெண் இருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டு, திருமணத்திற்காக பெண் பார்ப்பவர்கள் அந்த வீட்டில் உள்ள பெரியவர்களை அணுகுவார்கள். அந்த காலத்தில், கிராமங்களில் எல்லாம் வீட்டில் உள்ள கன்னிப் பெண்களை வெளியே காண முடியாது. இதற்காக இந்த பழக்கமானது மேற்கொள்ளப்பட்டது.
ஓசோன் வாயு
மார்கழி மாதக் காலை வேளையில் வீட்டு வாசலில் போடப்படும் கோலமானது கன்னிப்பெண்ணின் கையால் போடவேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மார்கழி மாதக் காலை வேளையில் வெளிவரும் ஓசோன் வாயுவை சுவாசிக்கும் கன்னிப்பெண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஓசோன் வாயு உடல் மீது படும் போதும் அவர்களின் முகமானது பொலிவுடனும் பிரகாசமாகவும் மாறிவிடும் என்பது நம்பிக்கை.
கன்னிப்பெண்களின் அழகு
மார்கழி மாதத்திற்கு அடுத்து வரும் தை மாதத்தில் அந்தப் பெண்ணை காணவரும் மாப்பிள்ளை வீட்டினர் அந்தப் பெண்ணின் அழகான தோற்றத்தைக் கண்டு திருமணத்தை நிச்சயித்து விடுவார்கள். கன்னிப் பெண்ணிற்கு திருமணம் நடந்துவிடும் என்பதற்காகவும் இந்த வழக்கமானது கடைபிடிக்கப்பட்டது.
மாட்டு சாணத்தில் பிள்ளையார்
மாட்டு சாணத்தில் பிள்ளையாரையும் பூசணி, பூவையும் எதற்காக வைக்கின்றனர் இதற்கும் ஒரு தத்துவம் உள்ளது. கிராமங்களில் மார்கழி முதல் தேதி அன்று ஒரு சாண பிள்ளையார், வைக்கத் தொடங்கி முப்பது தேதிகளுக்கு வரிசையாக அதிகப்படுத்திக் கொண்டே போவார்கள். இந்தப் பிள்ளையாரை கோலத்தின் மீது மண்ணில் வைக்கக்கூடாது. அரச இலையிலோ அல்லது ஆள இலையின் மீது வைக்கலாம்.
கிராம பழக்கங்கள்
நம் பிடித்து வைத்த சாண பிள்ளையாரை எல்லாம் சேகரித்து வைத்து, தை மாத தொடக்கத்தில், கன்னிப் பெண்கள் அனைவரும் சேர்ந்து, நீர் நிலைகளில் கொண்டு போய் கரைத்து விடுவார்கள். இந்தப் பிள்ளையாரை பிடித்து வைக்கும் பெண்கள் மனதார பிள்ளையாரை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இன்றளவும் சில கிராமங்களில் இந்த பழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலர் இந்த சாணங்களை சேகரித்து பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க பயன்படுத்துவதுண்டு.
தோஷங்கள் நீக்கும் பிள்ளையார்
அரசமரப் பிள்ளையாரை சுற்றினால் திருமணம் நடக்கும் என்பது அந்த காலத்தில் இருந்து வரும் நம்பிக்கை. திருமணத்தடையை நீக்குபவர் பிள்ளையார். எந்தவித தோஷமாக இருந்தாலும் விநாயகரை வழிபடும் போது அந்த தோஷமானது விளக்கப்படுகிறது. இதனால்தான் திருமண தடை நீங்க பிள்ளையாரை வணங்குகின்றோம். நகர் பகுதிகளில் சாணம் கிடைக்காது எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, பூ வைத்து கோலத்தின் மீது வைத்துக் கொள்ளலாம்.