மாசி சங்கடஹர சதுர்த்தி - மஞ்சள் கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று கடைபிடிக்கப்படுகிறது. முழுமுதற்கடவுளான விநாயகரை இன்று வணங்கி மஞ்சள் கயிற்றை மாற்றினால் காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சென்னை: மாசி சங்கடஹர சதுர்த்தி தினமான இன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் மஞ்சள் கயிறு மாற்றுவதற்கு உகந்த நேரமாகும். முழுமுதற்கடவுளான விநாயகரை இன்று வணங்கி மஞ்சள் கயிற்றை மாற்றினால் காலம் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது முன்னோர்கள் வாக்கு.
மாசிக் கயிறு பாசியேறும் வரை நிலைக்கும், மாசிக் கயிறு பாசி படியும் என்பது கிராமங்களில் கூறப்படும் பழமொழிகளாகும். அதாவது மாசி மாதம் விரதமிருந்து, மாற்றிக்கொள்ளும் மஞ்சள் கயிறானது, பாசி படரும் வரை கழுத்தில் நிலைத்திருக்கும் என்று இதற்கு அர்த்தம். மாசி மாத சங்கடஹர சதுர்த்தியின் போது விரதமிருந்து மஞ்சள் கயிறு மாற்றும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல் என்று பொருளாகும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகிவிடும். அதுவும் மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று இருக்கும் விரதம் துன்பங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உடையது.
தீர்க்க சுமங்கலி பாக்கியம்
பூவும் பொட்டுமாய் மஞ்சள் முகத்தோடு தீர்க்க சுமங்கலியாய் வாழ்வதையே பெண்கள் விரும்புவார்கள். வயதானாலும் சுமங்கலியாக வாழும் பெண்களையே சமுதாயத்தில் மங்கலகாரியங்களில் முன்னிறுத்துகின்றனர். எல்லா பெண்களுக்குமே நீண்ட சுமங்கலி பாக்கியம் உண்டாவதில்லை. கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும்.
கணவருக்கு நீண்ட ஆயுள்
பெண்ணின் ஜாதகத்தில் 8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆண்களின் ஆயுளை அதிகரிக்க கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8 ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.
குருபார்வை நன்மை
ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அது போல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.
பாவ கிரகங்களின் பார்வை
ஜோதிட ரீதியாக பார்க்கும் போது 7,8 ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்று சுபபார்வையின்றி இருந்தாலும் 7,8ஆம் அதிபதிகள் மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், மாங்கல்ய தோஷம் உண்டாகி கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது. அது போல மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீட்டிற்கு சமசப்தமஸ்தானமான 2ல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். களத்திரகாரகன் என வர்ணிக்கக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சனி, ராகு போன்ற பவ கிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் தோஷமாகும்.
சனி செவ்வாய் கூட்டணி
7,8 ம் அதிபதிகள் நீசம் பெற்றிருந்தாலும், நீசம் பங்கம் பெற்றிருந்தால் முதல் வாழ்க்கை தவறினாலும் இரண்டாவதாக ஒரு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7, 8ம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் 7,8 ம் அதிபதிகள் அமைந்த வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். 8ம் வீட்டை சனி, செவ்வாய் ஆகிய பாவகிரகங்கள் பார்வை செய்வதும் மாங்கல்ய தோஷமாகும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
சக்தி சிவத்தோடு ஐக்கியமாவதால் இம்மாதத்தில் திருமணம் நடத்தப் பெற்ற தம்பதியர்கள் நீண்ட ஆயுளோடு நிறைந்த திருமண வாழ்வினைப் பெறுவர். மாசி மாதம் விரதமிருந்து, மாற்றிக்கொள்ளும் மஞ்சள் கயிறானது, பாசி படரும் வரை கழுத்தில் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. மாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் மாலையில் திருமணமான பெண்கள் விரதமிருந்து மஞ்சள் கயிறை மாற்றிக் கொள்வார்கள். இதனால் கணவரின் ஆயுட்காலம் அதிகரித்து நித்திய சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.