சகட தோஷம் போக்கி நிலையான வாழ்வுதரும் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று காலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா ஞாயிறு நடைபெறுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிப் பெருவிழா கடந்த வாரம் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை தோரோட்டம் நடைபெற்றது.
கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 6 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் இருந்த சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தேரோட்டம் கோலாகலம்
மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க தேர் புறப்பட்டபோது கூடியிருந்த பக்தர்கள் ‘தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி', ‘நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள் பாலித்தார்.
ஜோதிடத்தில் தேரோட்டம்:
ஜோதிடத்தில் சொகுசான வாகனங்களுக்கு காரகன் சுக்கிரன் ஆவார். தேரில் அலங்காரமும் சேர்ந்து இருப்பதால் சுக்கிரன் பொருத்தமானதாகும். சுக்கிரன் என்றாலே அழகு என்பதால்தான் "திருவாரூர் தேரழகு" என்கிறார்கள் போலும்.
நவக்கிரகங்கள்
சாதாரணமாக ராஜாகளும், ஆட்சி செய்பவர்பவர்களும் செல்லும் தேர் என்றால் சுக்கிரனோடு நிறுத்திவிடலாம். ஆனால் தெய்வதிருத்தேர் என்றால் மேலும் சில கிரகங்கள் காரகமாகின்றனர்.உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரங்கள் குதிரையாகவும் ஏழுநாட்களை குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேரின் அழகு
மேலும் தேருக்கு தெய்வீக தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார். மேலும் பயணத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.
சனீஸ்வரர்
தேராட்டம் என்பது ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் தன்மைகளில் அழிக்கும் தன்மையை குறிப்பதாலும் தேர் மெதுவாக செல்லும் தன்மை கொண்டதாலும் சனைஸ்வர பகவானும் காரகனாகின்றனர்
சகட யோகம்
ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12 மிடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். சரி, இந்த "சகட யோகம்" என்பது என்ன செய்யும்?
இந்த யோகம் இருக்கிற ஜாதகர் உண்மையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு நாள் பார்த்தால் நல்ல 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். திடீரென்று கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். கடுமையாக போராடும் குணமுடையவர்கள்.
வண்டிச்சக்கரம்
ஒரு மாட்டு வண்டியிலுள்ள சக்கரத்தில் மேலே உள்ள ஒரு புள்ளி கண்டிப்பாக கீழே வந்தே ஆக வேண்டும், அதே போல கீழே வந்த புள்ளி மீண்டும் மேலே போயே தீர வேண்டும். இது சுழற்சி. இதையே யாரவது மாற்ற முடியுமா? அது போல தான் இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும். பெரும்பாலும் இவர்களை வீழ்ந்து விட்டார்கள், இவர்கள் அவ்வளவு தான் என்று நினைக்கும் போது இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள். அதே போல் சடார் என்று கீழேயும் வீழ்ந்து விடுவார்கள்.
தேரோட்டம் பார்தால் என்ன நன்மை?
தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வை தந்துவிடும். இன்று கன்னியில் நிற்கும் குருவிற்க்கு 12ல் சந்திரன் நின்று சகட தோஷம் கொண்ட நாளில் கபாலீஸ்வரர் தேரோட்டம் பார்பவர் அனைவரும் நிலையான வாழ்வை பெற்றுவிடுவர்.
தோஷம் நீங்கும்
தேருக்கு அழிக்கும் தன்மை கொண்ட சனி காரகம் பெற்றிருப்பதால் நம்மிடம் இருக்கும் கன்மம், மலம், மாயை எனும் மும்மலங்களும் அழியும். சனி ஆயுள் காரகர் என்பதால் மரணத்தை அழித்து நீண்ட ஆயுளை தந்துவிடுவார். மேலும் சூரிய சனி இணைவு அரசாங்க உயர்பதவிகளையும் பெற்றுவிடுவார்கள். குருவும் சூரியனும் சேர்ந்து நிற்பதால் கௌரவம் மேலோங்கும். குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் புத்திரதோஷம் நீங்கும். சனி சந்திர சேர்க்கை பெற்றிருப்பதால் புணர்ப்பு தோஷம் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும்.