தீராத கடனா? நாள்பட்ட நோயா? எதிரிகள் தொல்லையா? சத்ரு சம்ஹார மூர்த்தியை வணங்குங்க!
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
சென்னை: இன்று முருக பெருமானுக்கு விசேஷமான சஷ்டி விரதமாகும். நீண்ட நாட்களாக நோயால் அவதியுருபவர்கள், கடன் பிரச்சனை மற்றும் எதிரிகள் தொல்லைகளால் அவதியுறுபவர்கள் சஷ்டியில் முருகனுக்கு விரதமிருந்து சத்ரு சம்ஹார மூர்த்தியான முருகனையும் அவருடைய பக்தரான சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகளையும் வணங்குவது சிறப்பாகும்.
மக்களோடு மக்களாக இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும், தன்னை மணதால் நினைப்பவர்களுக்கும் அவர்களின் வினைகளைக் களைந்து மக்களின் நோய்,குழந்தைப்பேறு, குடும்பவறுமை போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை தீர்த்து வைய்த்த இப்போதும் தீர்த்து வைக்கின்ற இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் சித்தர்களில் ஒருவரே திருசெந்தூர் முருகப்பெருமானிடம் ஜோதி வடிவில் ஐக்கியமாகி நாம் அனைவரும் அவசியம் தரிசிக்கவேண்டிய பல இடங்களில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் இருக்கின்றன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள். சுவாமிகள் நடத்திக் காட்டிய அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளம் ஆகும்
சஷ்டி விரதமும் குழந்தை பேறும்:
பொதுவாக வளர்பிறை ஷஷ்டியில் விரதமிருப்பது குழந்தை பாக்கியத்திற்க்கும் தேய்பிறை ஷஷ்டியில் விரதமிருப்பது நாட்பட்ட நோய் தீரவும் முக்கிய விரத தினங்களாகும். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்" என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே ஆனால் இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பது நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகவும் காணப்படுகின்றது.
சஷ்டி திதியில் விரதங்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாகக் கிடைக்கும். அகப்பை என்பது உள்ளிருக்கும் கர்ப்பப்பையைக் குறிக்கிறது. அந்தத் திதியில் விரதம் இருந்தால் அகத்தில் இருக்கும் கருப்பை கருத்தரிக்கும் என்பது அர்த்தம். அதனால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்
ஜாதகத்தில் செவ்வாய் என்பது ஆண்மையையும் வீரியத்தையும் குறிக்கும். சூரியன் ஆன்மா உற்பத்தியாவதை அதாவது கருவளர்ச்சிக்கு தேவையான சீதோஷ்ணத்தை தருவது சூரியன். சஷ்டி திதியில் பிறந்தவர்களுக்கு மேஷமும் சிம்மமும் மற்றும் அதன் அதிபதிகளான செவ்வாயும் சூரியனும் பலமிழந்துவிடுவார்கள் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.
மேஷம் கால புருஷனுக்கு லக்ன பாவம். செவ்வாயின் மூல த்ரிகோண வீடு. சூரியன் உச்சமாகுமிடம். ஆண்மையை குதிரையோடு ஒப்பிடுவது வழக்கம். குதிரையை குறிக்கும் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் நக்ஷத்திரமாக அமைந்திருப்பதும் மேஷத்தில்தான். ஆக ஆண்மைக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பு இப்போது புரிந்திருக்கும்.
அடுத்தது சிம்ம ராசி. சிம்ம ராசி கால புருஷனுக்கு ஐந்தாமிடம் எனப்படும் புத்திரஸ்தானம் ஆகும். அதற்குறிய கிரகம் சூரியன் ஆகும். இந்த இரண்டு ராசிகளும் கிரஹங்களும் நன்றாக இருந்தால் தான் ஒருவர் தகப்பன் ஆகும் பாக்கியம் ஏற்படும்
ஆறுமுகனும் ஆறாம்பாவமும்:
ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஆறாமிடம் ருண ரோஹ சத்ரு ஸ்தானம் எனப்படும். இந்த ஆறாமிடம் மூலம் குறிப்பிட்ட ஜாதகரின் எதிரி எப்படிபட்டவர், எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார், ஜாதகர் என்ன காரணங்களுக்காக கடன் வாங்குவார் என்பதை அறியலாம். மேலும் சிறை தண்டனை கூட இந்த இடத்தை வைத்து கூற முடியும். ஆறாம் வீட்டில் பாவகிரகங்கள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எதிரிகள் குறைவாக இருப்பார்கள். அதுவே சுப கிரகம் அங்கே இருந்தால் அனேக எதிரிகளை எதிர்கொள்ளும் நிலை கொடுக்கும்.
நோய் தீர்ப்பதில் செவ்வாயும் அதன் அதிபதியான முருக பெருமானும் முக்கியமானவர்கள் ஆகும். முருகனுக்கு செவ்வாய் கிழமைகளில் விரதம் இருப்பது, ஷஷ்டியில் விரதமிருப்பது மற்றும் கிருத்திகை நக்ஷதிர நாளில் விரதமிருப்பது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
நோய் தீர்க்கும் சஷ்டி விரதம்:
நோய் என்பது தீர்க்ககூடியது. ஆனால் பிணி என்பது.தீர்க்க முடியாதது. நோயை மருத்துவர்கள்.குணப்படுத்திவிடுவார்கள். பிணியை குணப்படுத்துவது சிரமம். பிணி இறையருளால்தான்குணப்படும். வினையும் அப்படித்தான் இறையருளால்தான் தீரும் இங்கே வினை என்பது இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணமாக நம்பப்படும் முற்பிறவியில் நாம் செய்த செயல்
ஆறாமிடத்தில் அமர்ந்துள்ள கிரகங்கள் மூலமும், ஆறாமிடத்தை பார்வை செய்யும் கிரகங்கள் மூலமும், அந்த ஜாதகர் எத்தகைய நோய்களுக்கு ஆட்படுவார் என்பதையும் அறிய இயலும். இந்த நோய்களின் தாக்குதல் எப்போது பலமாக தன் இயல்பைக் காட்டும், எந்த காலக் கட்டங்களில் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதையும் அறியலாம்.
கடன் தொல்லை போக்கும் கந்த வழிபாடு:
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்க்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.
ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும்.வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும். லக்னாதிபதி 6ம் வீட்டிலும் 6ம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.
பகை அழிக்கும் வீரவேல்:
ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷதிரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும். புதனின் மற்றோரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும்.
கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள், புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும்.
மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத வியாதிகள் நீண்ட நாட்களாக இழுவையில் இருக்கும் வழக்குள், தொடர்ந்து தொல்லை தரும் சத்ருகள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் இந்த ஆறு நாட்களில் சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வணங்கி வர தொல்லைகள் முற்றும் நீங்கி நிம்மதியை தரும் என்பது நிதர்சனம்.
ஸ்ரீ சத்ரு சம்கார மூர்த்தி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் மகிழ மரத்தடி கோர்ட் காம்பவுண்ட் திருச்சியில் மிகவும் சிறப்பாக இயங்குகின்றது அங்கு சுவாமிகளைப்பற்றிய நூலும் இலவசமாக கிடைக்கும் ஐயாவின் கருணையால் ஒவ்வொரு பரணி நட்சத்திரம் அன்றும் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் பல ஆண்டுகளாக சிறப்பாக நடைபெறுகின்றது. இந்த சஷ்டி மற்றும் பரணி நக்ஷத்திர நாளில் அவரை நினைப்பதும் அவரை பார்ப்பதும் சத்ரு சம்ஹார மூர்த்தியான முருகன் அருளால் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வளங்கள் பல சேர்க்கும் என்பது மக்களின் நம்பிக்கை.