Purattasi Viratham: புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் என்னென்ன விரதம் இருக்கு தெரியுமா ?
சென்னை: ஆவணி மாதம் இன்றுடன் முடிகிறது புரட்டாசி மாதம் நாளை பிறக்கிறது. புரட்டாசி மாதம் ராசிச் சக்கரத்தின் கன்னி மாதத்தில் வருகிறது இது கன்னி மாதம். கன்னி மூலையில் அமைந்திருக்கும் விநாயகரை வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை மட்டுமின்றி திங்கள், புதன்கிழமையும் பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாட்களாகும். இந்த விரத வழிபாடுகள் மகாலட்சுமிக்கும் உகந்தவை.
புரட்டாசி மாதம் முன்னோர்கள் வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மகாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது. கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
புனித மிக்க புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

உடல் வலிமை அதிகரிக்கும் விரதம்
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.

எமபயம் நீங்கும்
ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும். எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்க வேண்டும்.

செல்வங்கள் சேரும்
புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று லட்சுமியை இந்திரன் வணங்குவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி மலர்களால், அலங்கரித்து வழிபட்டால் சகல செல்வங்களும் வந்து சேரும்.

அம்மனை வணங்கும் விரதம்
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.

பண்டிகை மாதம் புரட்டாசி
புரட்டாசி மாதம் அதிக வழிபாடுகள் நடத்த வேண்டிய மாதமாகும். அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதும் இந்த மாதத்தில்தான் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி தசமி வரை பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்குவதன் மூலம் அருளோடு பொருளும், தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications