சபரிமலை ஐயப்பனின் 18 படிகள் உணர்த்தும் தத்துவங்கள் யோகங்கள் என்னென்ன தெரியுமா
ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கோயில்கள், மூன்று மலங்கள் இவற்றைக் கடந்து மனமொன்றி வழிபட்டாலே ஐயப்பசாமியின் திருவருள் நம்மை வந்து சேரும் என்பதே 18 படிகளின் தாத்பர்யமாகும்.
சென்னை: சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம் ஐயப்பா என்று ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் பாடுவார்கள். இருமுடி தாங்கிச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டு படிகளைக் ஏறி சென்றுதான் ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். சபரிமலையில் உள்ள 18 படிகளின் தத்துவங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கோயில்கள், மூன்று மலங்கள் இவற்றைக் கடந்து மனமொன்றி வழிபட்டாலே ஐயப்பசாமியின் திருவருள் நம்மை வந்து சேரும் என்பதே 18 படிகளின் தாத்பர்யமாகும்.
பாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது. இராமாயணப் போர் 18மாதங்கள் நடைபெற்றது. தேவ, அசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது.
நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்தி நெறிக்கு ஆட்படுத்தாமல், நமது பிராரப்த வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது

முதல் படி விஷாத யோகம் : பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம்.
இரண்டாம் படி - சாக்கிய யோகம்: பரமாத்மாவே எம் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
மூன்றாம் படி - கர்ம யோகம்: கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்,
நான்காம் படி - ஞானகர்ம சன்னியாச யோகம் : பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி - சன்னியாச யோகம் : நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது.
ஆறாம் படி - தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி - பிரம்ம ஞானம்: இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி - அட்சர பிரம்ம யோகம்: எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி - ஆன்மிக யோகம் : கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி - விபூதி யோகம் : அழகு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது.
பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம் : பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி - பக்தி யோகம் : இன்பம் - துன்பம், ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது.
பதிமூன்றாம் படி - க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல்.
பதினான்காம் படி - குணத்ர விபாக யோகம் : வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது.
பதினைந்தாம் படி - தெய்வாகர விபாக யோகம் : நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.
பதினாறாம் படி - சம்பத் விபாக யோகம் : இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது.
பதினேழாம் படி - சிரித்தாத்ரய விபாக யோகம் : 'சர்வம் பிரம்மம்' என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது.
பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்: உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவதாகும்.
சத்தியம் நிறைந்த இந்து பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி தத்துவம்.பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.












Click it and Unblock the Notifications