சனிப்பெயர்ச்சி 2022: ஏழாரை சனியால் யாருக்கு கஷ்டம்... என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம்
சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஏழரை சனி வரப்போகிறது என்று இப்போதே பயப்பட ஆரம்பித்து விடுவார்கள். என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: சனிபகவான் நீதிமான். நல்லவர்களுக்கு நல்லதைக் கொடுப்பார். தீயது நினைத்து தீயது செய்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுப்பார். மகர ராசியில் உள்ள சனிபகவான் சில மாதங்களில் கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாகப்போகிறார். சனிபகவானின் இடப்பெயர்ச்சியால் யாருக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது யாருக்கு ஏழரை சனி முடியப்போகிறது என்று பார்க்கலாம். இந்த சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு ஏழரை சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி காலம் என்றும் கூறுவர்.
சனிபகவான் கோச்சார ரீதியாக 3, 6, 11ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

சனிப்பெயர்ச்சி எப்போது
சனிபகவான் தற்போது மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து மற்றொரு வீடான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி சுபகிருது வருடம் சித்திரை மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.54 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி செய்கிறார். நேரடியாக தை மாதம் 03ஆம் தேதி ஜனவரி 17,2023ஆம் தேதியன்று கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

ஏழரை சனி யாருக்கு
இந்த சனிபெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடிவடைகிறது. அதே நேரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும், மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும் ஏழரை சனி தொடர்கிறது. இந்த ஏழரை சனி காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

ஏழரை ஆண்டுகாலம் சனிபகவான் பயணம்
சனீஸ்வர பகவான் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். சந்திரன் நின்ற வீட்டுக்கு 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். ஒருவர் வாழ்வில் ஏழரைச்சனி என்பது மூன்று முறை வரலாம். முதல் முறை வருவது மங்குசனி என்றும் இரண்டாவது முறை வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது முறை வருவது மரணச்சனி என்றும் கூறப்படும்.

ஏழரை சனியில் சோதனை தரும் சனிபகவான்
சனி பகவான் கோச்சார ரிதியாக ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக ராசிக்கு 12, 1, 2ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்மராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ஆம் வீட்டில் பயணிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.

பாதிப்புகள் என்ன ஏற்படும்
இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும்.

விரைய சனி காலம்
கோசார ரீதியில் சனி பகவான் சந்திரன் நின்ற ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் விரயச்சனி ஆகும். இதற்கு சனிக்கிழமை தவறாது சனீஸ்வர பகவானை வலம் வர வேண்டும். எள் எண்ணெய் தீபம் ஏற்றினால் நலம். தினசரி காக்கைக்கு அன்னம் இடுவது. தன்னால் இயன்ற தான தர்மங்களை செய்து வருவதும் நலம். இது மிகமிக எளிமையானது ஆகும். விரயச்சனி காலத்தில் இதுபோல செய்யலாம்.

ஜென்ம சனி காலம்
ஜென்ம சனி பாதிப்பு காலத்தில் தினசரி அல்லது சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வலம் வருவது நலம். இந்த காலத்தில் பசுவின் பாலை சிவபெருமானுக்கு அபிஷேகத்துக்கு வழங்கலாம். ஏழைகளுக்கு கறுப்பு ஆடை தானம் வழங்கலாம். இந்த தானம் அவரவர் ஜென்ம வாரமாகவோ அல்லது ஜென்ம நட்சத்திரமாகவோ இருப்பது மிகவும் சிறப்பு ஆகும். உடலில் பலகீனம், நோய் போன்றவை நீங்காமல் இருந்தால் தவறாது பிரதோஷ விரதமிருத்தல் சிறப்பு. அதிலும் சனிப்பிரதோஷ விரதம் இருப்பது மிக மிக சிறப்பு.

காகத்திற்கு சாதம் வைக்கலாம்
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.

புனித நீராடல்
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், புனித நீர்நிலைகள் ஆறு, குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். கடலில் குளிக்க முடியாதவர்கள் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கலாம்.

சனிபகவானை சரணடையுங்கள்
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரை சனி குறுக்கிட்டே தீரும். சனி பகவான் அவரவர் பூர்வ புண்ணியத்துக்கு ஏற்ப நன்மையும் தீமையும் கலந்தே தருவார். சோதனைக் காலங்களில் மனமுருகி சனியை வழிபட்டால் தேவையான பரிகாரங்கள் செய்தால் சோதனையின் அளவு குறையும். சிவ பூஜை செய்பவரை சனி அவ்வளவு பாதிப்பது இல்லை. பூஜை, ஜெபம் மூலம் சனீஸ்வர பகவானை தியானிக்கலாம்.












Click it and Unblock the Notifications