ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் தை தேரோட்டம் : தேரில் காட்சி அளித்த நம்பெருமாளை ஆன்லைனில் தரிசனம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த பிரசித்திப்பெற்ற தைத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த பிரசித்திப்பெற்ற தைத்தேர் திருவிழா புனர் பூச நட்சத்திரத்தில் இன்று நிலைத்தேரோட்டமாக நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் பங்கேற்பின்றி பூபதித்திருநாள் நடைபெற்றது.
பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தை மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தைத் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை மார்கழியில் நடத்தாமல் கார்த்திகை மாதத்திலேயே ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் நடத்தியது.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் பிரசித்திபெற்ற திருவிழாவான வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவை விட பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தை தேரோட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்த திருத்தேரோட்டம் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பூபதித்திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
நம்பெருமாள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 19ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
தைத்தேர் உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.15 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 4.15 மணிக்கு கொடிப்படம் புறப்பட்டு காலை 5.15 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நம் பெருமாள் திருமஞ்சனம்
நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு கோவில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இரவு 1 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைந்தார்.
நெல்லளவு கண்டருளல்
தொடர்ந்த பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார் நம்பெருமாள். நான்காம் திருநாளன்று பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். 15ஆம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். 16ஆம் தேதி நேற்று மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார் நம்பெருமாள்.
தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் இன்று நடைபெற்றது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் நிலைத்தேரில் எழுந்தருளினார்.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
தேரோட்டம் நடத்தாமல் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் வகையில் நிலைத்தேர் வைபவம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அனுமதி அளித்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நிலைத்தேர் வைபவம் 17 ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் 5 மணிக்குள் நடத்தலாம். 50நபர்களுக்கு மிகாமல் ஆகம விதிப்படி நடத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளித்ததை அடுத்து நிலைத்தேர் உற்சவம் நடைபெற்றது. 18ஆம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19ஆம் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார். விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் பக்தர்கள் ஆன்லைனில் தரிசனம் செய்தனர்.