மாங்கல்யபாக்யம் தரும் ஆனி பௌர்ணமி - நட்சத்திரங்களுக்கும் பௌர்ணமிக்கும் உள்ள தொடர்பு
27 நட்சத்திரங்களில் பௌர்ணமிக்கும் 12 நட்சத்திரங்களுக்கும் முக்கிய தொடர்பு உள்ளது. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பௌர்ணமிக்கும் நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உ
சென்னை: பௌர்ணமி வழிபாடு என்பது புராண காலத்திலும், பண்டைய காலத்தில் இருந்தும் வழி வழியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பௌர்ணமிக்கும் நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பௌர்ணமியில் ஆலயங்களில் சக்தி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை, அன்னதானம் நடைபெறுகின்றன. பலர் தங்களின் வீடுகளில் சத்யநாராயணா பூஜை செய்கின்றனர். பௌர்ணமியில் கிரிவலம் செய்வது சிறப்பானது. மலையினை சுற்றி வருவதால் மனத்திற்கு அமைதியும் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் பூமி மற்றும் சந்திரன் சுழற்சியில் சந்திரனின் ஒளிபெறும் பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாளே பௌர்ணமி
சந்திரனின் ஒளிபெறாத பகுதி முழுவதுமாக பூமிக்கு தெரியும் நாள் அமாவாசை.
பௌர்ணமி அன்று நிலவில் இருந்து வெளிவரும் காந்த ஈர்ப்பு விசையானது பூமியின் மேல்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்றைய தினத்தில் கடல் அலைகள் அதிகமாக மேலெழும்புகின்றன. அதேபோல் உயிரினங்களின் மனஎழுச்சியும் எண்ண ஓட்டமும் அதிகமாக இருக்கும். அன்றைய தினத்தில் நிலவை பலரும் ரசித்தாலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சித்திரை பௌர்ணமி
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியில் ஏதேனும் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வார். சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் மரண பயம் நீங்கும்.
ஆனி மாங்கனி திருவிழா
வைகாசி மாதத்தில் பௌர்ணமி பொதுவாக விசாக நட்சத்திரத்தில் வருகிறது. தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும், புத்த பூர்ணிமாகவும் கொண்டாடப்படுகின்றன. விசாகத்தில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.
ஆனியில் பௌர்ணமி பொதுவாக கேட்டை நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி பௌர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைக்கப்படுகின்றன.
காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருந்தால் காதல் கைகூடும். ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்யபலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அம்மனுக்கு உகந்த பௌர்ணமி
ஆடி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக உத்திராட நட்சத்திரத்தில் வருகிறது. ஆடி பௌர்ணமி அன்று திருமாலை வழிபாடு செய்வது சிறப்பாகும். குடும்பத்தில் வளர்ச்சியும், அமைதியும் கிடைக்கும். புண்ணியம் கிட்டும். ஆடி பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்! ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். கல்வி வளம் கிடைக்கும்.
ஆவணி திருவோணம்
ஆவணி மாதத்தில் பௌர்ணமியானது பொதுவாக அவிட்ட நட்சத்திரத்தில் வருகிறது. ஆவணி பௌர்ணமி அன்று திருவோணமும், ரக்சாபந்தனும் கொண்டாடப்படுகின்றன. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட கடன் தொல்லை தீரும். சகோதர வாழ்வு மேம்படும்.
அன்னைக்கு உகந்த நாள்
புரட்டாசியில் பௌர்ணமி பொதுவாக உத்திரட்டாதியில் வருகிறது. புரட்டாசி பௌர்ணமி அன்று உமாமகேஸ்வர வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்கும். அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா' என்ற திருநாமம் உண்டு. அன்றைய தினத்தில் அம்மை அப்பர் வழிபாடு, கடன் தொல்லையை நீக்கும். புரட்டாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். காரியத் தடைகள் விலகும்.
ஐப்பசி அன்னாபிஷேகம்
ஐப்பசி பௌர்ணமி அசுவினியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி கார்த்திகை நட்சத்திரத்தில் வரும். அன்றைய தினத்தில்தான் இறைவன் ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார். இன்றைய தினத்தில் வீடுகளில் ஆலயங்களில் விளக்கேற்றி வழிபட மனக்கவலைகள் நீங்கும். கண்நோய் தீரும் நன்மைகள் கிடைக்கும்.
திருவாதிரை, தைபூசம்
மார்கழியில் பௌர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவபெருமான் ஆனந்த நடனமாடி நடராஜராக காட்சியளித்த நன்நாள். அதனால் மார்கழி பௌர்ணமி அன்று நடராஜருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட குறைகள் நீங்கும். நோய்கள் குணமாகிடும் காரிய வெற்றி கிடைக்கும். தை மாதத்தில் பௌர்ணமி பொதுவாக பூசத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை பௌர்ணமியில் விளக்கேற்றி வழிபட்டால் ஆயுள் விருத்தி அடையும்.
மாசி மகம், பங்குனி உத்திரம்
மாசி மாதத்தில் பௌர்ணமியானது மகம் நட்சத்திர தினத்தில் வருகிறது. இன்றைய தினம் நீர்நிலைகளில் நீராடுவது சிறப்பானது. கும்பமேளா, கும்பகோணத்தில் மாசி மகம் ஆகியவை மாசி பௌர்ணமியில் கொண்டாடப்படுகின்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட நற்கதி கிடைக்கும். பங்குனியில் பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. பங்குனி உத்திரத்தில் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை ஆகிய தெய்வீக திருமணங்கள் நடைபெற்றன. இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் நீங்கும். திருமண தடைகள் அகலும்.