திருப்பதியில் ஏப்.1 முதல் ஆர்ஜித சேவை... டிக்கெட் ரிலீஸ் பற்றி பாலாஜி பக்தர்களுக்கு செம அறிவிப்பு
திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் ஏப்ரல் 1 முதல் தொடங்க உள்ளன. ஏழுமலையானை வழிபட ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் முதல் வெளியிடப்படுகிறது.
திருப்பதி:ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபட ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் 21ஆம் முதல் வெளியிடப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
'திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளன. கொரோனா காரணமாக அந்த சேவைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏகாந்தமாக நடைபெற்ற அந்த சேவைகளை மக்கள் ஆன்லைனில் தரிசனம் செய்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
இந்த நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்ஜித சேவைகளை அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதியில் இருந்து தொடர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்.

மார்ச் 20 முதல் டிக்கெட் ரிலீஸ்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை மற்றும் நிஜபாத தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய, பக்தர்கள் 20ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து 22ஆம் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

கல்யாண உற்சவம்
ஆன்லைன் குலுக்கல் முறை மூலம் பக்தர்களுக்கு டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும். 22-ந்தேதி காலை 10 மணிக்கு பிறகு டிக்கெட்டுகள் பெறுவோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். இதேபோல் பக்தர்களுக்கு செய்தி மற்றும் எஸ்.எம்.எஸ், இ- மெயில்மூலம் தெரிவிக்கப்படும். டிக்கெட்டுகள் பெறும் பக்தர்கள் டிக்கெட்டுகளின் கட்டணத்தை 2 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். மறுபுறம் பக்தர்கள் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை நேரடியாக முன்பதிவு செய்யலாம்.

ஏப்ரல், மே, ஜூன் மாத விரைவு தரிசனம்
திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் வருகிற 21ஆம் தேதியும் , மே மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் 22ம் தேதியும், ஜூன் மாதத்திற்கான டிக்கெட் 23ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. திங்கட்கிழமை காலை 9 மணி முதல் தரிசன டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். ரூ.300 டிக்கெட்டுகள் 21 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும் 24 முதல் 27ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 25ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

தங்கும் விடுதிகளில் இலவச தரிசன டிக்கெட்டுகள்
அத்துடன் பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் தங்கும் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி சத்திரம் ஆகிய இடங்களில் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு, நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வழங்கப்படும் டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 30 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications