திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா - சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் அர்த்தம் தெரியுமா?
கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் கோலகலமாகத் தொடங்கியுள்ளது. சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்: சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. வரும் 9ஆம் தேதி சூரசம்ஹாரமும், 10ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
கந்த சஷ்டியில் விருதம் இருந்து வழிபடுவோர்க்கு குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வளரும் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் பல விழாக்கள் நடைபெற்றாலும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சியும் பக்தர்கள் இல்லாமல் எளிமையாக நடைபெற்றது. நடப்பாண்டிற்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியுள்ளது.
கந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார்.
கந்த சஷ்டி விழா தொடங்கியதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
கந்த சஷ்டி : திருச்செந்தூரில் நவம்பர் 9ல் சூரசம்ஹாரம்,10ல் திருக்கல்யாணம்
2ஆம் திருநாள் முதல் 5ஆம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடர்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 6ஆம் திருநாளான வருகிற 9ஆம்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கோவில் வளாகத்தில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும்.
7ஆம் திருநாளான 10ஆம் தேதி புதன்கிழமை இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமணத்தடை உள்ளோர் திருக்கல்யாண உற்சவத்தை காண்டால் திருமணத்தடை நீங்கும்.
கந்த சஷ்டியில் விருதம் இருந்து வழிபடுவோர்க்கு குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பார்கள். அதாவது கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வளரும் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளனர். சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார நாளில் சுப்ரமணியரை தரிசனம் செய்தால் அடுத்த கந்த சஷ்டிக்குள் குழந்தை இல்லாத பெண்களுக்கு மசக்கை ஏற்படும். மாங்காய் சாப்பிடுவார்கள். அழகன் முருகனைப் போல ஒரு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம்.
ஏழு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 5ஆம் திருநாள் வரையிலும் தினசரி 10ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்வதற்காக தற்காலிக காத்திருப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹார விழாவை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.