சூரிய கிரகணம் 2020: கேது கிரஹஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது - எங்கு பார்க்கலாம்
சூரிய கிரகணம் வரும் 14ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது, வழக்கமான நிகழ்வுகள் தடைபடாது.
சென்னை: சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 29ஆம் தேதி டிசம்பம் 14ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணிவரை கேட்டை, மூலம் நட்சத்திரங்களில் நிகழும் கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. பொதுவாக கிரகணம் என்றாலே என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.
கிரகணம் வந்தாலே பலருக்கும் பயம்தான், சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ அது வானியல் நிகழ்வுதான். சூரிய கிரகணம் அமாவாசை நாளில் பகலிலும், சந்திர கிரகணம் பவுர்ணமி நாளில் இரவிலும் நிகழ்கிறது.
சில நாட்களுக்கு முன்பு சந்திர கிரகணம் பகலில் நிகழ்ந்தது என்பதால் இந்தியாவில் தெரியவில்லை. அதே போல சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் தெரிய வாய்ப்பு இல்லை. இந்த முழு சூரிய கிரகணம் தென் அமெரிக்காவில் முழுமையாக தெரியும். சிலி, அர்ஜென்டைனா,தென்மேற்கு ஆப்ரிக்கா, அண்டார்டிகாவில் முழுமையாக தெரியும்.
கிரகண நேரத்தில் சாப்பிட கூடாதா?
சூரிய கிரகணம் பற்றி சாஸ்திரத்தில் பல முக்கிய விசயங்கள் கூறப்பட்டுள்ளன. சூரிய கிரகணம் ஏற்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டு விட வேண்டும். கிரகண காலத்திற்கு முன்பு சமைத்த உணவுகளை கிரகணம் முடிந்த பின்னர் சாப்பிட வேண்டாம்.7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 70 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு விதி விலக்கு உண்டு. சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் திரவ உணவுகளை மட்டும் சாப்பிடலாம். கிரகணம் முடிந்த பின்னர் சிரார்த்தம் செய்யவும்.
வீடு சுத்தம் செய்யவும்
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எந்த கிரகணம் என்றாலும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது. கதிர்வீச்சுக்களால் கண்கள் பாதிக்கப்படும். கர்ப்பிணிகள் உடம்பில் கிரகணங்களின் கதிர்வீச்சுக்கள் உடம்பில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கிரகணம் தொடங்கும் முன்பும் முடிந்த பின்னரும் கட்டாயம் குளிக்க வேண்டும். வீடுகளை கழுவி சுத்தம் செய்வது அவசியம்
தோஷம் நீக்கும் தர்ப்பை புல்
கிரகண நேரத்தில் உறங்க கூடாது. கிரகணம் நிகழும் முன்பு தண்ணீர், வேக வைக்காத உணவுப்பொருட்கள், அரிசி போன்றவைகளில் தர்ப்பை புல்லை போட்டு வைக்க வேண்டும். இதன்மூலம் கிரகண தோஷம் ஏற்படாது என்பது ஐதீகம்.
இறைவன் நாமம்
கிரகணம் பிடித்திருக்கும் நேரங்களில் பூஜை அறையில் விளக்கேற்றி அமர்ந்து இறைவன் நாமத்தை உச்சரிக்கலாம். அமைதியாக மனசுக்குள் சொல்வது சிறப்பு. கர்ப்பிணிகள் தனிமையில் அமர்ந்து உங்களுக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரிக்கலாம். இதன் மூலம் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
கொள்ளு தானம் கொடுங்க
கிரகணம் நிகழும் நேரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பானது. தகப்பனார் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்யலாம் இதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். கிரகண நேரத்தில் தானம் கொடுப்பது சிறப்பானது. இது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் என்பதால் கேதுவிற்கு பிடித்த தானியமான கொள்ளு தானம் கொடுக்கலாம்.
கேது கிரகஸ்த சூரிய கிரகணம்
சார்வரி வருடம் கார்த்திகை மாதம் 29ஆம் தேதி டிசம்பர் 14, 2020ஆம் ஆண்டு திங்கட்கிழமை இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணிவரை கேட்டை, மூலம் நட்சத்திரங்களில் நிகழும் கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. வழக்கமாக சூரிய கிரகணம் நேரங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது.
அதிசயத்தை பார்க்கலாம்
2020ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாவிட்டாலும் தென் அமெரிக்காவில் முழுமையாக தெரியும். சிலி, அர்ஜென்டைனா,தென்மேற்கு ஆப்ரிக்கா, அண்டார்டிகாவில் முழுமையாக தெரியும். தொலைக்காட்சிகள், இணைய தளங்களில் லைவ் செய்வார்கள் பார்த்து ரசிக்கலாம்.