பொன்னியின் செல்வனுக்கு வால் நட்சத்திரம்.. பிரிட்டன் அரச குடும்பத்திற்கு சந்திர கிரகணம்: பரபர ஜோதிடம்
லண்டன்: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் வரும் 8ம் தேதி நடக்கிறது. ஆனால் இந்த சந்திர கிரகணத்தால் பிரிட்டனின் அரச குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேபோல அமெரிக்காவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலிலும் இந்த சந்திர கிரகணம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
இந்தியா போன்ற பாரம்பரிய பன்பாட்டை கடைப்பிடிக்கும் நாடுகளில் இதுபோன்று ஜோதிடம் பார்த்து கிரகணம் குறித்து கூறுவது இயல்பானதாக இருக்கையில், தற்போது அமெரிக்காவில் ஜாதகம் பார்த்து கிரகண பலன்களை கணித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சந்திர கிரகணம்..மேஷ ராசியில் ராகு உடன் இணையும் சந்திரன்.. இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்!
கிரகணம்
வரும் 8ம் தேதி நடைபெற உள்ள சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்தது என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இதன் பின்னர் 2025ம் ஆண்டுதான் அடுத்த முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் இந்த சந்திர கிரகணம் பூமியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த Joy Yascone-Elms எனும் பெண் ஜோதிடர் கூறுகையில், "இந்த சந்திர கிரகணம் பிரிட்டனின் அரச குடும்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது, மன்னர் சார்லஸ், வில்லியம், கேட் மிடில்டன், ஹாரி மற்றும் மேகன் மார்க்லே ஆகியோர் இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படுவார்கள்.
ஜோதிடம்
ஏற்கெனவே கிங் சார்லஸ், வேல்ஸ் இளவரசி என அரச குடும்பத்தின் முக்கிய புள்ளிகள் கடந்த 2021ம் ஆண்டு முதல் பல துயரங்களை சந்தித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், இந்த துன்பத்திற்கு எதிர் வரும் சந்திர கிரகணம் எந்த தீர்வையும் காட்டாது. இவர்கள் 2023ம் ஆண்டு வரை இந்த துயரத்தை எதிர்கொள்வார்கள். அதேபோல அமெரிக்காவில் நடக்க உள்ள இடைத்தேர்தலிலும் இந்த சந்திர கிரகணம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த தேர்தல் நடக்கும் நாளில்தான் சந்திர கிரகணம் நடக்கிறது" என்று கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன்
எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வனில், வால் நட்சத்திரத்தால் அரச குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் கணித்ததாக குறிப்பிடப்பட்டு இருக்கும். அதேபோல, அருண்மொழித்தேவன், சுந்தர சோழன் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்போது அதில் இருந்து தப்பிப்பித்து விடுவார்கள். ஆனால் ஆதித்த கரிகாலன் அதே சமயத்தில் உயிரை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
புராணம்
இந்தியா போன்ற பழம்பெரும் நாகரிகம் கொண்ட நாடுகளில் மட்டுமே கிரகணங்கள் தொடர்பாக நிறைய கதைகள் இருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கிரகணம் குறித்து ஜாதகம் கணித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் கிரகணங்களுக்கு ராகு கேதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது புராண கதைகளின்படி, பாற்கடல் கடையப்பட்டு அமிர்தம் எடுக்கப்பட்டது. இவ்வாறு எடுக்கப்பட்ட அமிர்தத்தை விஷ்னு மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
ராகு கேது
பாற்கடலிலிருந்து அமிர்தம் கடைய தேவர்களுக்கு அசுரர்களும் உதவி செய்வதால் அவர்களுக்கும் அமிர்தம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆக இவ்வாறு கடையப்பட்ட அமிர்தம் முதலில் தேவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது தேவர்களின் வேடத்தில் வந்த சுவர்பானு எனும் அரக்கன் அமிர்தத்தை வாங்கி குடித்துவிட்டார். இதை கண்டுபிடித்த சூரியனும், சந்திரனும் விஷ்ணுவிடம் புகார் சொல்லிவிட்டனர். உடனே வாளை எடுத்து சவர்பானுவின் தலையை விஷ்ணு கொய்துவிட்டார். ஒபந்தத்தை மீறிவிட்டதால் இனி அசுரர்கள் யாருக்கும் அமிர்தம் கிடையாது என்று விஷ்ணு சொல்லிவிட்டார்.
வரம்
ஆனால் தலை வெட்டப்பட்ட சுவர்பானு ஏற்கெனவே அமிர்தத்தை குடித்திருந்ததால் உயிரிழக்கவில்லை. எனவே பிரம்மனை நினைத்து தவமிருந்து உயிர் வாழ வேண்டும் என கோரிக்கை வைத்தார் சுவர்பானு. இதனையடுத்து பாம்பின் தலை அவருக்கு பொருத்தப்பட்டது. அதேபோல இவரின் தலை பாம்பு உடலுடன் பொருத்தப்பட்டது. இப்படியாக இருவரும் ராகு, கேது என உருவெடுத்தனர். இதன் பின்னர் தன்னை காட்டிக்கொடுத்த சூரியன், சந்திரனை பழிவாங்க தவமிருந்து வரத்தை பெற்றனர். இந்த வரத்தின் மூலம்தான் ஆண்டின் நான்கு நாட்கள் கிரகணங்கள் நடைபெறுகின்றன என இந்திய புராணம் கூறுகிறது.