ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது - 25ல் சொர்க்க வாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டாகத்துடன் தொடங்கியுள்ளது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் 24ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவமும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவமும் நடைபெறும். 25ஆம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.
பகல் பத்து உற்சவத்தின்போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
அரையர் சேவை
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று திருமொழி திருவிழா தொடங்கியது. நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள்.
நம்பெருமாள் அலங்காரம்
மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
வைகுண்ட ஏகாதசி
பகல்பத்து உற்சவத்தின் 10 வது நாள் வரும் 24ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். டிசம்பர் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் சொர்க்கவாசல் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் டிசம்பர் 25ஆம் தேதி காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
நம்பெருமாளின் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி திருவிழா தினத்தன்று அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நம்மாழ்வார் மோட்சம்
சொர்க்கவாசல் 26ஆம்தேதி முதல் 30ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 31ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 1ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. ஜனவரி 4ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது.
பக்தர்கள் முன்பதிவு
வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறும் நாட்களில் மூலவர் முத்தங்கி சேவை, பரமபதவாசல் ஆகியவற்றுக்கு கோயிலின் www.srirangam.org (http://srirangam.org>>e-Seva) என்ற இணையதள முகவரியில் இலவச மற்றும் கட்டண தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிகளை srirangam temple என்ற கோயிலின் யூடியூப் சேனலிலும், உள்ளூர் தொலைக்காட்சியிலும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.