திருமலையில் வைகுண்ட ஏகாதசி - 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசிக்க அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், 14ஆம் தேதியன்று துவாதசி விழாவும் நடைபெறுகிறது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், 14ஆம் தேதியன்று துவாதசி விழாவும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இராப்பத்து திருவிழாவும் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். பரமபத வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்களுக்கு தினசரி 5ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 10 நாட்களுக்கு 50 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா.. 2 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு! ஓமிக்ரான் பாதிப்பும் உயர்வு
ஏழுமலையான் கோயிலில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது, முக்கிய வி.ஐ.பி. பக்தர்களுக்கு பிரேக் தரிசனம், இலவச தரிசனம், ஸ்ரீவாணி ட்ரஸ்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம்
வைணவ பக்தர்கள் போற்றி துதிக்கும் 108 திவ்யதேசங்களில் மிக முக்கியமானது திருப்பதி ஏழுமலையான் ஆலயம். வைகாசண ஆகமங்களின் படி நித்ய பூஜைகள் நடக்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதுண்டு. தற்போது கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக ஏராளமான கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இக்கோயிலில் வரும் 13ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது பற்றி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பரமபத வாசல் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13ஆம் தேதியன்று வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், 14ஆம் தேதியன்று துவாதசி விழாவும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இராப்பத்து திருவிழாவும் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். பரமபத வாசல் எனப்படும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். 13ஆம் தேதியன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது, அதிகாலை 1:45 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அப்போது, வி.ஐ.பி பக்தர்களுக்கு பிரேக் தரிசனம், இலவச தரிசனம், ஸ்ரீவாணி ட்ரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனங்களில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
உள்ளூர் மக்களுக்கு அனுமதி
கடந்த ஆண்டு டெல்டா வகை கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெற்ற நாட்களில், திருப்பதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதே போல், இந்த ஆண்டு ஓமைக்ரான் என்னும் கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலை பரவி வருவதால், பாதுகாப்பு கருதி திருப்பதியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மட்டும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு ஒரு முறை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அவசியம்
வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு, திருமலையில் பக்தர்கள் தங்கவதற்கு சுமார் 7500க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. தற்போது இவற்றில் 1500க்கும் மேற்பட்ட அறைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் திருப்பதியில் அறைகளை முன்பதிவு செய்துகொண்டு, திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யலாம்.
ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதால், பக்தர்கள் திருப்பதிக்கு வருவதற்கு முன்பாகவே 48 மணி நேரத்திற்கு முன் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா நோய்த்தொற்று அபாயம் இல்லை என்று ஆர்.டி.பி.சி பரிசோதனைச் சான்றிதழை உடன் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதோடு, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
சக்கர ஸ்நானம்
வைகுண்ட ஏகாதசி திருவிழா அன்று, காலையில், நான்கு மாடவீதிகளிலும் தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. துவாதசி தினத்தன்று அதிகாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை சக்கர ஸ்நானம் நடைபெறும். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் வளாகத்தில் தற்போது செயல்பட்டு வரும் 31 கவுண்ட்டர்களுக்கு பதிலாக 41 கவுண்ட்டர்கள் செயல்பட ஏற்படுகள் செய்யப்படும். தடையின்றி லட்டு பிரசாதம் கிடைக்கும் வகையில் அங்கு சுமார் 6 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விதிமுறைகளை பின்பற்றுங்கள்
அன்னப்பிரசாதம், மொட்டை போடுதல், மருத்துவம், சுகாதாரம், ஆகிய துறைகளில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், அனைத்து துறைகளிலும் உள்ள ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள், பக்தர்களுக்கு சேவையாற்றுவதுடன், திருமலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் வாங்க கூடிய பக்தர்கள்
சொர்க்கவாசல் வழியாக செல்வதற்கு தினந்தோறும் 5,000 உள்ளூர் மக்கள் இலவசமாக செல்வதற்கு டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்ததை அடுத்து அதனை பெறுவதற்கு ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடினர். நாள் ஒன்றுக்கு 5000 பேர் என 50ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே இரவில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.