செல்வ வளம், மாங்கல்ய பாக்யம் அருளும் வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். அம்பாள் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்வு வளமாகும்.
சென்னை: மகாலட்சுமி தேவிக்காக இருக்கும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கின்றனர்.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்த போது பூரண கும்பத்துடன் தோன்றியவர் லட்சுமி. இவரை மகா விஷ்ணு மணந்து கொண்டார்.
வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். அம்பாள் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்வு வளமாகும்.
ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில தருணங்களில், ஆடி மாதத்தில் அமையும். ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம். அன்றைய தினம் லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும் ஏற்ற நாள்.
அன்றைய தினம் பங்காளிகள் ஒன்றுகூடி முன்னோர்களுக்கு வழிபாடும், குலதெய்வ பூஜையும் செய்ய உகந்த நாளாகும்.
வரலட்சுமி பூஜை எப்படி செய்வது
பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை மெழுகி, கோலமிட்டு, வெள்ளை அடிக்க வேண்டும். வீட்டில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய மண்டபம் அமைத்து அதை அலங்கரிக்க வேண்டும். மண்டபத்தில் இரு பக்கங்களிலும் வாழைக்கன்று கட்டி, பூக்களால் தோரணம் கட்ட வேண்டும். அதில் தங்கம், வெள்ளி அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம். இலையை மலர்களால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும்.
ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகியவற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். மலர்களால் அன்னையை அர்ச்சித்து, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும்.
வரலட்சுமிக்கு நிவேதானம்
அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்புச்சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்டலட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடை பெறும். சுமங்கலி பெண்கள் தம் குடும்பம் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வாழவும், செல்வங்கள் பெருக வேண்டும் என்றும், கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும், குழந்தைகள் நலமுடன் வாழ வேண்டியும், தேவியிடம் வரங்களை வேண்டி வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.