விஜயதசமியில் வித்யாரம்பம் - அரிசியில் அ எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்
சென்னை: நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் நேற்று வித்யாரம்பம் நடைபெற்றது. கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை ஆரம்பித்தனர். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் 'அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும்போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். அதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம். குரு மற்றும் சரஸ்வதியின் ஆசியுடன் தொடங்கும் ஞானத்தின் தேடல் என்ற நிகழ்வானது இந்தியாவில் ஒரு பாரம்பரிய சிறப்புகளில் ஒன்றாக இருக்கிறது.
பல மாநிலங்களில் இந்த நிகழ்வானது மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஞானத்தின் தேடலில், பள்ளியில் சேரும் முதல் நாள் நெல் அல்லது அரிசியில் குழந்தையை எழுதச் சொல்லி பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்து வைப்பார்கள். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். இந்த கல்வி கற்பதன் மூலம் ஒருவர், பரந்த உலகில் அறிவு மற்றும் ஞானத்தை தேட தொடங்குகின்றார்.
அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்து, நாம் நம்முடைய ஞானத்தேடலுக்கான முதற்படியில் தவழ ஆரம்பிக்கிறோம். கல்வியறிவின்மை மற்றும் அறிவின்மை என்னும் இருளை நாம் வெற்றி கொள்ளப்போவதை மறைமுகமாக உணர்த்தும், இந்த நிகழ்வானது வெற்றியின் அடையாளமான விஜயதசமி அன்று நிகழ்த்தப்படுகிறது. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
வித்யாரம்பம்
இந்தியாவில் தனி சன்னதி கொண்ட சரஸ்வதி கோயில்கள் ஒரு சில மட்டுமே உள்ளது. இதில் பிரசித்தி பெற்ற கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் புலவர் ஒட்டக்கூத்தரால் வணங்கி வழிபாடு செய்யப்பட்டு பாடல் பாடப் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் விஜயதசமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பள்ளி மாணவர்கள் நோட்டு, பேனாவை வைத்து வணங்கினர். சிறு பிள்ளைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் பச்சரிசியில் அகரம் எழுதி பழக்கினர்.
பச்சரிசியில் எழுதிய குழந்தைகள்
இதனையொட்டி சென்னை மயிலாப்பூரில் பல்வேறு கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து பச்சரிசியில் அச்சரம் எழுதிப் பழக்கினர். அண்ணாநகர், மகாலிங்க புரம் உள்ளிட்ட முக்கிய ஐயப்பன் கோயில்களில் வித்யரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் காலை முதலே கோயில்களில் திரண்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொள்ள, அவர்களுக்கு முன்பு தாம்பாலத்தில் நெல்மணி, பச்சரிசி வைக்கப்பட்டது.
அரசு பள்ளிகளில் சேர்க்கை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு, நெல்மணியில் தாய்மொழி தமிழ்மொழியின் முதல் எழுத்தான. ‘அ' எழுத வைத்து கல்வி கற்கத் தொடக்கி வைத்தனர். தங்க ஊசியைக் கொண்ட குழந்தைகளின் நாவில் ‘அ' எனவும் ஓம் என்றும் எழுதினர். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என உறவுகள் பெயர்கள் அனைத்தையும் குழந்தைகளை எழுத வைத்தனர். சில குழந்தைகள் ஓம் என்றும் எழுதினர். மேலும், பல அரசு தொடக்கப்பள்ளிகள், கல்வி நிறுவனங்களில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையும் வித்யாரம்பமும் நடைபெற்றது. விஜயதசமி நாளில் அரிசி நெல்லில் எழுதுவதன் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.
கற்றுக்கொள்வது நன்மை
இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் இந்நாளில் ஒன்று சேர்ந்து இருளை எதிர்த்துப் போராட நம் அனைவருக்கும் உதவுகின்றன. குழந்தைகள் இந்த நாளில் தான் முதன் முதலில் எழுத தொடங்குகின்றனர். அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பதை கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் மெதுவாக ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது எனக் கற்று, இறுதியாக தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதையும் கண்டுபிடிக்கின்றனர். எனவே இந்த நாள் உங்கள் குழந்தைகளின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஒரு நீண்ட நெடிய பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது.
ஓம் என்று எழுதுவது ஏன்
ஒரு குழந்தை ஓம் என்கிற சொல்லை எழுதி தன்னுடைய ஞான வேட்கையை தொடங்குகின்றது. இதை முதன் முதலில் எழுதுவது ஒரு சிறந்த தொடக்கமாக விஜயதசமி கருதப்படுகின்றது. ஆரம்பத்தில், குழந்தைகள் தங்களுடைய குருகுலத்தில் ஓம் என்கிற சொல்லை மணலில் எழுதி தங்களுடைய எழுத்தறிவித்தலை தொடங்கினார்கள். ஆனால், தற்போது குழந்தைகள் அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஓம் என்கிற சொல்லை எழுதுகின்றார்கள். இதுவே அனைத்தினுடைய தொடக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
பாரம்பரிய முறை
வேதகாலத்தில் உபநயனத்தின் போதே அரிசியில் எழுத ஆரம்பித்து விடுவார்கள். அப்பொழுது குழந்தைகளின் வயது சுமார் ஐந்தாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நவீன காலத்தில் சுமார் மூன்று வயதிலேயே குழந்தைக்கு ஆரம்பித்து விடுகின்றார்கள். கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுதக் கற்றுக்கொள்வது, ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற முதல் சொல்லை மணல், நெல் அல்லது அரிசியில் எழுதச் சொல்கிறோம். இந்த இந்திய பாரம்பரியமானது குருகுல வாசல் முதல் இன்றைய நவீன பள்ளிகள் வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது எனவேதான் விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வருடம் மிஸ்பண்ணிட்டேன்னு நினைக்காதீங்க. மூலம் நட்சத்திரம் வரும் நாளில் சரஸ்வதி படத்தின் முன்பாக குழந்தைகளுக்கு எழுத கற்றுக்கொடுங்க சரஸ்வதி யோகம் தானாக தேடி வரும்.