சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் அம்மையப்பர் படம் தாலி வைத்து பூஜை - என்ன பலன்
திருப்பூர் மாவட்டம் சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் அம்மையப்பர் படத்துடன் திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் புதிய பொருள் வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்துள்ளது. கைலாய மலையில் அம்மையப்பருடன் விநாயகரும், முருகரும் இருப்பது போன்றும், இருபக்கவாட்டிலும் அகோர வீர பத்ரர், ஒரு தெய்வ ஜாதகம், ஒரு திருமாங்கல்யம், ரூ.32 மதிப்புள்ள நாணயங்கள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும்.
தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

மண் முதல் தங்கம் வரை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப்பெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.

இரும்பு சங்கிலி
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பூஜை பொருட்கள்
காங்கேயம் தாலுகா முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் முருகன் தோன்றி கைலாய மலையில் அம்மையப்பருடன் விநாயகரும், முருகரும் இருப்பது போன்றும், இருபக்கவாட்டிலும் அகோர வீர பத்ரர், ஒரு தெய்வ ஜாதகம், ஒரு திருமாங்கல்யம், ரூ.32 மதிப்புள்ள நாணயங்கள் வைத்து பூஜிக்குமாறு கூறியுள்ளார்.

பக்தருக்கு உத்தரவு
இதையடுத்து அந்த பக்தர் கோவிலுக்கு வந்து, ஆண்டவன் தனது கனவில் வந்து உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க கூடிய படம் குறித்து கூறினார். இதையடுத்து சாமியிடம் உத்தரவு பெற்று, அந்த பக்தர் கூறிய சாமி படத்தை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

திருமண தடை நீங்கும்
தற்போது உலகத்தில் அன்பு, அறம், சத்யம் ஆகிய மூன்றும் குறைந்து விட்டது. இந்த மூன்றையும் சாமி மீட்கப்போவதாகவும், மேலும் திருமண சுபகாரியங்கள் கைகூடும். திருமண தடை அகலும். சுபகாரிய நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும் தனக்கு வந்த கனவின் பலன் குறித்தும் பூஜை பொருட்கள் பற்றியும் கூறியுள்ளார் பக்தர் கோகுல்ராஜா.












Click it and Unblock the Notifications