ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி - டிசம்பர் 3ல் திருநெடுந்தாண்டகம், டிச.14ல் சொர்க்கவாசல் திறப்பு
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா இம்முறை கார்த்திகை மாதத்தில் நடைபெறுகிறது இன்று முகூர்த்த கால் வைபவம் துவங்கியது.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் டிசம்பர் 03 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது. சொர்க்கவாசல் திறப்பு என அழைக்கப்படும் பரமபதவாசல் திறப்பு அதிகாலை டிசம்பர் 14ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது.
அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.
வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசியாக பெருமாள் ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம்
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் ஶ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது.

கார்த்திகையில் வைகுண்ட ஏகாதசி
19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே ஸ்ரீரங்கத்திற்கு மட்டும் வைகுண்ட ஏகாதசி வரும்
விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்ட போது
மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும் தை முதல் பகுதியில் தை திருநாளும் வந்தால் எதை கொண்டாடுவது எப்படி கொண்டாடுவது என கேள்வி வந்தது. அப்போது ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி 19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த வைகுண்டஏகாதசி திருவிழாவை கார்த்திகையில் பெரியபெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால்
அன்றுமுதல் 19வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகையிலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருட வைகுண்ட ஏகாதசி திருவிழா காண முகூர்த்தக்கால் நிகழ்வு ஸ்ரீரங்கம் கோயில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் நடைபெற்றது.

திருநெடுந்தாண்டகம்
இந்த ஆண்டு கார்த்திகை 17ஆம் தேதி டிசம்பர் 03ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்குகிறது. அதனை தொடர்ந்து 04.12.2021 - பகல்பத்து திருமொழித் திருநாள் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

சொர்க்கவாசல் திறப்பு
டிசம்பர் 14ஆம் தேதியன்று அன்று வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு என அழைக்கப்படும் பரமபதவாசல் திறப்பு அதிகாலை 4.45 மணி திறக்கப்படும். நம்பெருமாள் பக்தனுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

நம்மாழ்வார் மோட்சம்
டிசம்பர் 19ஆம் தேதியன்று திருக்கைத்தல சேவையும், டிசம்பர் 21ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி விழாவும் நடைபெறும். டிசம்பர் 23ஆம் தேதி தீர்த்தவாரியும், டிசம்பர் 24ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications