முருகன் ஆலயங்களில் கோலாகலமாக நடந்த சூரசம்ஹாரம் - வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முழக்கம்
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்செந்தூர் / பழனி
முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் நேரில் பங்கேற்காவிட்டாலும் சஷ்டி விரதமிருந்த நேரலையில் சூரசம்ஹாரத்தை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். வீடுகளில் விரதம் இருந்த பக்தர்கள் ஏராளமானோர் படையலிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ஆம் திருநாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். கோவில் கடற்கரை நுழைவுவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், கையில் வேலுடன் எழுந்தருளினார்.
முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார்.
மாமரமாக உருமாறி வந்த சூரபத்மனை சம்ஹாரம் செய்து சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். அப்போது அங்கிருந்தவர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2 வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான பழநியில் நடந்த கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தில், சூரன்களை சின்னக்குமாரர் வதம் செய்தார்.
பழனி மலைக்கோயிலில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு தினமும் மாலையில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை கிரிவீதிகளில் நடைபெற்றது. முன்னதாக மலைக்கோயிலில் மரிக்கொழுந்து அம்மனிடம் சூரனை வதம் செய்ய சின்னக்குமாரர் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சன்னதி நடை அடைக்கப்பட்டது.
மலைக்கோயிலில் இருந்து வந்து மலையடிவார கிரிவீதிகளில் சின்னக்குமாரர் மயில் வாகனத்தில் எழுந்தருளினார். வடக்கு கிரிவீதியில் தாரகசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை அடுத்தடுத்து சுவாமி சம்ஹாரம் செய்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்ததால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
சூரன்களை வதம் செய்த சின்னக்குமார் வெற்றிவிழாவிற்கு பிறகு மலைக்கோயில் சென்றடைந்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியை பக்தர்கள் யூடியூப் மூலம் தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழா நிறைவாக நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ஆம் தேதி முதல் கந்த சஷ்டி விரதம் இருந்த ஏராளமான முருக பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் தங்களின்வீடுகளில் படையலிட்டு வழிபட்டு விரதம் முடித்துக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications