5ஜி டவர்களால் அதிகரிக்கும் கேன்சர் பாதிப்பு.? கவனமாக இருக்க எச்சரிக்கும் நெட்டிசன்கள்.! உண்மை என்ன
டெல்லி: மொபைல் பயன்பாடு காரணமாக பல்வேறு உடல்நிலை பாதிப்புகள், குறிப்பாக கேன்சர் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இணையத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த காலத்தில் மொபைல் போன் என்பது நமது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. ஆன்லைன் ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாமே ஆன்லைன் என்றாகவிட்டது.
மொபைல் போன் இல்லாமல் ஒரு நாள் வாழ்க்கையை ஓட்டுவதே இங்குப் பலருக்கும் பெரிய சவாலாகவே இருக்கும். அந்த அளவுக்கு மொபைல் போன் நமது வாழ்க்கையில் பிரிக்கவே முடியாத ஒன்றாகிவிட்டது.

மொபைல்
இப்படி நமது வாழ்க்கையிலேயே தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட மொபைல் போனால் கேன்சர் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தொடர்ச்சியாகத் தகவல்கள் பரவி வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருக்கும். இதற்கிடையே சில ஆய்வாளர்கள் உண்மையில் மொபைல் பயன்பாட்டிற்கும் கேன்சருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளனர்.

கேன்சர்
மேலும், மொபைல் பயன்பாட்டால் கேன்சர் பரவ வாய்ப்புள்ளது என்ற தகவல் மக்களிடையே எப்படிப் பரவியது என்பது குறித்தும் ஆய்வு செய்துள்ளனர். அமெரிக்காவின் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் இதற்கு இரு முக்கிய காரணங்கள் இருக்கும் என நினைக்கிறது. முதலில், மொபைலில் இருந்து வரும் கதிர்வீச்சு. இந்த ரேடிய கதிர்வீச்சு கேன்சரை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சுகின்றனர். மொபைல் பயன்பாடு இப்போது பல மடங்கு அதிகரித்துவிட்டதும் இந்த அச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.

அச்சம் ஏன்
உலகில் மொபைல் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்ட நிலையில், மொபைல் ஃபோனால் கேன்சர் ஏற்பட மிகக் குறைந்த வாய்ப்பு இருந்தாலும் கூட அதை நாம் மிக சீரியசாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு பாதிப்பும் கூட கேன்சரை ஏற்படுத்தும் என்று மக்கள் அஞ்சுகின்றனர். மொபைலை நாம் காதில் வைத்துப் பேசுவதால் மக்கள் கேன்சர் பாதிப்பை நினைத்து கவலை கொள்கின்றனர். ஆனால், இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

ஆபத்து இல்லை
இதற்கு ஏற்றார் போலவே சில மூளை புற்றுநோய்களுக்கு கதிர்வீச்சுதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இது செல்போன்கள் வெளியிடும் கதிர்வீச்சை விடப் பல மடங்கு சக்திவாய்ந்த கதிர்வீச்சாகும். இதனால் கேன்சர் ஏற்பட எந்தவொரு ஆபத்தும் இல்லை. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதர்களுக்கு எந்தவொரு ஆபத்தையும் தராது.

மொபைல்
2ஜி, 2ஜி, 4ஜி மொபைல்கள் 0.7 முதல் 2.7 GHz வரையிலான கதிர்வீச்சைத் தான் வெளியிடும். அதேநேரம் மறுபுறம் ஐந்தாம் தலைமுறை 5ஜி மொபைல்கள் 80 ஜிகாஹெர்ட்ஸை பயன்படுத்துகிறது. இந்த அனைத்துமே ஆபத்தில்லாத வரம்பில் தான் வருகிறது. இது குறைந்த அதிர்வெண் மற்றும் எனர்ஜி கொண்டதாகவே இருக்கும். இதனால் நமது உடலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

கேன்சர் பாதிப்பு இல்லை
எக்ஸ்ரே, ரேடான் மற்றும் காஸ்மிக் கதிர்கள் மூலம் வெளியிடப்படும் அயனியாக்கும் கதிர்வீச்சு காரணமாகவே கேன்சர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த அதிக கதிர்வீச்சு தான் டிஎன்ஏவை சேதப்படுத்தும். கேன்சர் பாதிப்பு ஏற்கவே இதுபோன்ற கதிர்வீச்சுகளே காரணமாகும். இந்த கதிர்வீச்சுகளையும் மொபைலில் இருந்து வரும் கதிர்வீச்சையும் ஒரே போலப் பார்க்க முடியாது.

அதிகரிக்காது
தேசிய புற்றுநோய் நிறுவனம் நடத்திய ஆய்வில் மொபைல் போன் பயன்பாட்டால் கேன்சர் ஏற்பட எந்தவொரு காரணமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், மொபைல் பயன்படுத்தும் ஒருவரையும் மொபைலை பயன்படுத்தாத ஒருவரையும் ஒப்பீட்டு பார்க்கும் போது, இருவருக்கும் கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் ஒரே அளவுக்கு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. எனவே, மொபைல் பயன்பாட்டால் கேன்சர் பரவும் என்று பரவும் செய்தியில் உண்மையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
5ஜி மொபைல் டவர்கள் மற்றும் மொபைல் பயன்பாட்டால் கேன்சர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
முடிவு
5ஜி மொபைல் டவர்கள் மற்றும் மொபைல் காரணமாக கேன்சர் ஏற்படுவதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை












Click it and Unblock the Notifications