மோடியை ஆதரியுங்க... அத்வானியை ஆர்.எஸ்.எஸ்.தூதராக சந்தித்த நிதின் கத்காரி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தூதராக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை சந்தித்துப் பேசியிருக்கிறார் நிதின் கத்காரி.
நரேந்திர மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக்குவது என்பதை முடிவு செய்து விட்டது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கடந்த ஒரு வார காலமாக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது வலியுறுத்தப்பட்டும் விட்டது. இறுதி முடிவை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்தான் அறிவிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். பகிரங்கமாக கூறியுள்ளது.
ஆனால் மோடியை ஏற்பதில் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் தயக்கம் காட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இப்போது இந்த மூவரணியை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இதன் ஒருபகுதியாக பாஜக முன்னாள் தலைவரான நிதின் கத்காரியை தூதுவராக அனுப்பியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். நிதின் கத்காரி நேற்று டெல்லியில் அத்வானியை சந்தித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிலையை விவரித்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம், மோடியைத்தான் பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பொறுத்தவரையில் செப்டம்பர் 19-ந் தேதிக்குள் நரேந்திர மோடியை பாரதிய ஜனதாவின் வேட்பாளராக அறிவித்துவிடுவது என்பதில் உறுதியாக இருக்கிறது. மோடியின் ஆதரவாளர்களோ மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதிக்கு முன்னதாக அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இதனால் டெல்லியில் பாரதிய ஜனதா வட்டாரங்கள் பரபரப்பாக இருக்கின்றன.












Click it and Unblock the Notifications