மோடியை கிண்டல் செய்து மீம்ஸ்.. ஜோக் அடிச்சாலும் வழக்குதான்.. தன்மயி மீது மும்பை போலீஸ் எப்ஐஆர் பதிவு
அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்றுவிடும் பிரதமர் மோடியை கிண்டல் செய்து மீம்ஸ் வெளியிட்ட தன்மயி பட் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது மும்பை போலீஸ்.
மும்பை: பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவது குறித்து சின்னக் குழந்தை கூட இந்தியாவில் கிண்டல் அடிக்கிறது.
இதே போன்று, ஜோக்கிற்காக மோடியை வைத்து மீம்ஸ் வெளியிட்ட தன்மயி பட் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பலரையும் கிண்டல் செய்து மீம்ஸ் ரெடி செய்து சமூக வலைதளங்களில் உலாவவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது மும்பையில் ஏஐபி என்ற பெயரில் இயங்கி வரும் குழு. இந்தக் குழு மீம்ஸ் விஷயத்திற்கு மிகவும் பிரபலம்.
தப்புவாரா மோடி
அவர்களிடம் இருந்து அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி தப்புவாரா என்ன? அதற்கான ஒரு மீம்ஸை ரெடி செய்து சமூக வலைதளங்களில் உலாவவிட்டது இந்தக் குழு.
பிரதமர் மோடி போன்றே உருவ ஒற்றுமையுள்ள நபர் ஒருவர், பேக்குடன் ரயில்வே நிலையத்தில், ரயிலுக்கு காத்திருப்பது போன்றும், அப்போது அவர் கையில் உள்ள செல் போனை இயக்குவது போன்றும் அந்த மீம்ஸை ரெடி செய்திருந்தனர் ஏஐபி குழுவினர்.
சர்ச்சைக்குரிய படம்
மேலும், இந்த படத்திற்கு கீழே பயண விரும்பி என்ற வாசகமும் இடம் பெற்று இருந்தது. இதே போன்று சர்ச்சைக்குரிய மற்றொரு மீம்ஸையும் வெளியிட்டு பரபரப்பை ஏஐபி ஏற்படுத்தியது. இதனால் பாஜகவினர் கடும் ஆத்திரத்திற்கு உள்ளானார்கள்.
எப்ஐஆர் பதிவு
இதுகுறித்து தகவல் மும்பை போலீசாருக்கு வரவே, ஏஐபி குழுவைச் சேர்ந்த தன்மயி பட் மீது வழக்கு பதிவு செய்துள்ளது மும்பை போலீஸ். இதனையடுத்து, சமூக வலைதளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய மீம்ஸ் நீக்கப்பட்டது. என்றாலும், இது ஒரு ஜோக்கிற்காக வெளியிடப்பட்டது என்று தன்மயி பட் விளக்கம் அளித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய வீடியோக்கள்
முன்னதாக, இந்த குழுவினர், கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர்கள் ரன்வீர் சிங் மற்றும் அர்ஜூன் கபூர் ஆகியோரை கிண்டல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதேபோல், சச்சின் டெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷர் ஆகியோரையும் கேலி செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இவை அனைத்துமே பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.