திமுகவினர் பக்குவப்பட்டவர்கள்: காளிமுத்து
சென்னை:
திமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் என்னுடன் பழைய பாசறையில் இருந்தவர்கள். பக்குவப்பட்டவர்கள். ஜனநாயகமரபுகளை மீறாமல் சபையில் நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று சபாநாயகர் டாக்டர் கா. காளிமுத்துகூறியுள்ளார்.
தமிழக சட்டசபை சபாநாயகராக வியாழக்கிழமை காளிமுத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர்பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காளிமுத்துவைப் பாராட்டிப் பேசினர். இறுதியில் நன்றி தெரிவித்து காளிமுத்துபேசியதாவது:
சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து, புடம் போட்ட தங்கமென, ஏளனங்களை ஏணிகளாக்கி,அவமானங்களை அஸ்திவாரமாக்கி, வரலாறு படைத்து அரிமா போல அமர்ந்திருக்கும் முதல்வருக்கும், என்னைஏகமனதாக சபாநாயகராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்திய உறுப்பினர்களுக்கும் நன்றி.
அதிமுகவில் நான் நீண்ட காலமாக ஸ்பீக்கராக இருந்ததால், சபாநாயகர் பதவிக்கும் நான்தான் பொருத்தமானவன்என்று இந்த இருக்கையில் என்னை அமர்த்தியிருக்கிறீர்கள். கடிவாளம் இல்லாத குதிரை போல இருந்த எனக்குஇந்தப் பதவியை அளித்து முதல்வர் எனக்கு கடிவாளமிட்டிருக்கிறார். புலியைக் கூட சைவமாக்கும் பெருமை நமதுமுதல்வருக்கு மட்டுமே உண்டு.
ஆபுத்திரன் கையில் இருந்த அமுதசுரபி போல நல்லவர்கள் கையில் இந்த சபை இருக்க வேண்டும் என்றஅடிப்படையில் இப்பதவியை எனக்கு அளித்துள்ளார் முதல்வர். என் தாயை விட உயர்ந்த ஆசனத்தில் அமர்த்திஅழகு பார்த்திருக்கிறார். அதற்கும் எனது நன்றிகள்.
திருக்குறளின் "நடுவுநிலை" என்ற அதிகாரத்தில் வரும் பத்து குறள்களையும் மனதில் வைத்து செயல்படுவேன்.நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான் சபாநாயகர் இருக்கையை நடுவில் போட்டிருக்கிறார்கள்.
ஆளுங்கட்சி என்பது கொதிக்கின்ற சோறு போன்றது. அதனை பதம் பார்க்கின்ற அகப்பையாக எதிர்க்கட்சிகள்இருக்க வேண்டும் என்று ஒருமுறை பேரறிஞர் அண்ணா சொன்னார். அகப்பை சோற்றைத்தான் பதம் பார்க்கவேண்டுமே தவிர, பானையைப் பதம் பார்க்கக் கூடாது. பானையைப் பதம் பார்க்க நினைத்தால் பின்னர்அகப்பையைப் பதம் பார்க்கும் கடமை எனக்குண்டு.
திமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் என்னுடன் இருந்தவர்கள். பழைய பாசறையைச் சேர்ந்தவர்கள்.பக்குவப்பட்டவர்கள். சபையில் ஜனநாயக மரபுகளை மீறாமல் இப்போதும் நடந்து கொள்வார்கள் என்றுநம்புகிறேன்.
அவை சீரோடும், சிறப்போடும் நடக்க அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் காளிமுத்து.