த.மா.கவினர் காங்கிரசுக்கு வருவார்கள்- மணிசங்கர்
டெல்லி:
மூப்பனாரின் மறைவையடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் ஒவ்வொருவராக காங்கிரஸ் கட்சியில்வந்து சேருவார்கள் என எதிர்பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.
அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்துவிட தீவிரமாக இருந்தார். ஆனால், அதற்கு அவரது கட்சியிலும் எங்கள் தரப்பிலும்சில இடைஞ்சல்கள் இருந்தன. காங்கிரசுடன் இணைவது என்பதில் அவருக்கு இரு வேறு கருத்துக்கள் இருந்ததில்லை.பிரச்சனைகள் காரணமாகவே அதை ஒத்திப் போட்டிருந்தார்.
இப்போது அவரது மறைவையடுத்து இந்த இணைப்பு விவகாரம் மீண்டும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது குறித்து இருதரப்பிலும் நிறைய விவாதிக்க வேண்டியுள்ளது.
த.மா.கா. முறைப்படி காங்கிரஸ் கட்சியில் வந்து சேருவதற்கு முன்பே அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள்,நிர்வாகிகள் தனித்தனியாக காங்கிரஸ் கட்சிக்கு வர ஆரம்பித்துவிடுவர் என்று தான் நினைக்கிறேன்.
தமிழகத்தில் இரு காங்கிரஸ் கட்சிகளும் இணைந்தால் பலமிக்க சக்தியாக உருவெடுக்க முடியும். திமுகவை மக்கள்புறக்கணித்துவிட்டார்கள். அந்தக் கட்சி கலகலத்துப் போய் உள்ளது. கலைஞருக்கும் வயதாகிவிட்டது. அந்தக் கட்சியின்எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந் நிலையில் காங்கிரஸ்-தா.மா.க. இணைந்தால் திமுகவுக்கு ஒரு மாற்று சக்தியாகக் கூடஉருவெடுக்க முடியும்.
இவ்வாறு மணி சங்கர் ஐயர் கூறினார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
மூப்பனாரின் இழப்பு மிகப் பெரிய துயர சம்பவமாகும். அவர் வேறு கட்சியில் இருந்தாலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருதலைவரை இழந்ததாகத் தான் கருதுகிறோம். நேரு குடும்பத்துக்கும் சோனியாவுக்கும் மிக நெருக்கமானவர். மிகச் சிறந்தகாந்தியவாதி.
ஜெயந்தி நடராஜன்:
மூப்பனாரை இழந்ததன் மூலம் நாங்கள் அனாதைகளாகிவிட்டோம். இது போன்ற ஒரு தலைவர் எங்களுக்கு எப்போதும்கிடைக்கப் போவதில்லை என்றார்.
திண்டிவனம் ராமமூர்த்தி:
காமராஜருக்குப் பின் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தான் என தமிழக காங்கிரஸ்முன்னாள் தலைவரான திண்டிவனம் ராமமூர்த்தி கூறினார்.
மூப்பனாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்த அவர் கூறுகையில், காமராஜருக்குப் பின்னர் தமிழக கலாச்சாரத்தின்அடையாளமாக இந்தியா முழுவதும் ஏற்கப்பட்டவர். தனது கடைசி மூச்சுவரை காங்கிரஸ் காரராகவே வாழ்ந்தார்.
தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கிய பின்னர் கூட காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்ந்து நட்புறவைப் பேணியவர். காங்கிரஸ்தலைவர்கள் தவறு செய்ததாகக் கோபப்பட்டுத் தான் தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கினார்.
ஆனால், எப்போதுமே காங்கிரஸை வெறுத்ததில்லை. எப்போது டெல்லி சென்றாலும் சோனியாவைச் சந்திக்க அவர்தவறியதில்லை.