வேளச்சேரிக்கு வந்த "வேப்ப மர ஆத்தா"
சென்னை:
சென்னை வேளச்சேரியில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் அம்மனே மரத்தில் குடியேறியதாக நினைத்து அம்மன்பக்தர்கள் மரத்திற்கு மாலை அணிவித்து, மஞ்சள் சார்த்தி பக்திகரமாக வணங்கி வழிபட்டனர்.
வேளச்சேரி தரமணி இணைப்புச் சாலையில் உள்ளது பாரதி நகர். இங்குள்ள பவானி தெருவில் வேப்ப மரம் ஒன்றுஉள்ளது.
அந்த மரத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பால் வடிந்துள்ளது. காலையில் அதைப் பார்த்த அந்தத் தெருவைச்சேர்ந்த சிலர் மரத்தில் பால் வடிவதாக தெரு முழுக்கக் கூறியுள்ளனர்.
இதையடுத்து தெருவே அங்கு கூடியது. முதலில் லேசாக வரத் தொடங்கிய பால், பின்னர் அருவி போல கொட்டத்தொடங்கியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்மனே மரத்தில் வந்து குடியேறியிருப்பதாகதெரிவித்தனர்.
இதையடுத்து மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, எலுமிச்சைகள் மாலையாக்கப்பட்டு அணிவிக்கப்பட்டன.மரத்திற்கு மஞ்சள் பாவாடையும் சார்த்தப்பட்டது.
பின்னர் அங்கிருந்தவர்கள் பாலைப் பிடித்து அருந்தத் தொடங்கினர். ஆனால் வழக்கமான பாலாக இல்லாமல், ஒருமாதிரியாக இருந்ததால் அதை சாப்பிடுவதை விட்டு விட்டனர்.
இருப்பினும் வெள்ளிக்கிழமை மாலை வரையிலும் பால் வடிவது நிற்கவில்லை. பால் கசியும் வேப்ப மரத்தின்அருகே "வேப்பம்மன் ஆலயம்" அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கூறினர்.
மரங்களில் ரப்பர் போன்ற பிசின் சுரப்பது வழக்கமானதுதான். வேப்ப மரத்தில் வந்த பாலும் இந்த ரகத்தைச்சேர்ந்ததுதான் என்று கூறப்படுகிறது.