உள்ளாட்சித் தேர்தல்: போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்யும் தடா கைதி
திருநெல்வேலி:
நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு தடா கைதி ஒருவர் போட்டியிடுகிறார். இவர் போலீஸ் காவலுடன்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் குண்டுவெடித்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டு, தடா கைதியாக இருப்பவர் குட்டி என்ற காஜா நிஜாமுதீன்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இவர் தற்போது, பாளையங்கோட்டை சிறையில் இருந்துவருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட அனுமதி கேட்டிருந்தார். அதற்கு கோர்ட் அனுமதியளித்தும்,தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்காததால் போட்டியிடமுடியாமல் போனது.
தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர் நெல்லை மாநகராட்சியில் உள்ள 37- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
இதற்காக பிரச்சாரம் செய்வதற்கு கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தார்.
இதை கோர்ட் ஏற்றுக் கொண்டது. 2 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்ய சிறையில் இருந்து வெளியில் செல்லவும்நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து சிறைத்துறை அவரை விடுதலை செய்தது.
துப்பாக்கிகளுடன் கூடிய போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்ய குட்டியை சிறைத்துறை அதிகாரிகள்அனுமதித்துள்ளனர்.
அதன்படி இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு எஸ்.பி. தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள்மற்றும் 6 துப்பாக்கிய ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன், குட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.