உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 4 லட்சம் பேர்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்தல்களத்தில் உள்ளனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. மொத்தம் 1லட்சத்து 31 ஆயிரத்து 292 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 24ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த தேர்தலில் 3 பிரதான அணிகள் போட்டியிடுகின்றன. திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்தக்கூட்டணிகளுக்குத் தலைமை வகிக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள்தனித்துப் போட்டியிடுகின்றன.
வேட்பு மனுத்தாக்கல் துவங்கியதிலிருந்தே சுயேச்சைகள்தான் அதிக அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்துவந்தனர். கடைசி சில நாட்களில்தான் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
மனுத்தாக்கல் செய்ய இறுதி நாளான திங்கள்கிழமை மட்டும் ஆயிரக்கணக்கானோர் மனுத்தாக்கல் செய்தனர்.திங்கள்கிழமை மாலை 3 மணி வரை தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் வரை வேட்பு மனுத்தாக்கல்செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.