மாமனாரின் செக்ஸ் தொல்லை: சாகும் வரை உண்ணாவிரதத்தில் மருமகள்
தர்மபுரி:
மாமனாரின் செக்ஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ள பெண் தனது கைக் குழந்தையுடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் கீதா. இவருக்கும் தனபால் என்பவரின் மகன் சரவணனுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சரவணன் தனது தந்தை தனபால், தம்பி ஆகியோருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன் வேலை தேடி திருப்பூர் சென்றுவிட்டார் சரவணன். தனது மனைவியை தந்தையின் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார். ஆனால், திருப்பூர் சென்ற சில மாதங்களில் அங்கு இன்னொரு பெண்ணுடன் சரவணனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் சரவணன்.
ஆனால், இவரது மனைவி கீதா தொடர்ந்து மாமனார் வீட்டில் தான் வசித்து வருகிறார். இந் நிலையில் தனது மகனால் கைவிடப்பட்ட தனது மருமகள் மீதே மாமனார் தனபாலுக்கு ஆசை வந்தது.
இதையடுத்து பலமுறை கீதாவை இரவில் கற்பழிக்க முயன்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் இருந்து தப்பிவிட்ட கீதா ஒரு கட்டத்தில் மனம் வெதும்பி விஷம் அருந்தினார். அவரை ஊர் பொது மக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தனர்.
சிறிது காலம் சும்மா இருந்த அந்த மாமனார் மிருகம் மீண்டும் கீதாவை இரவில் கற்பழிக்க முயல மீண்டும் விஷம் குடித்தார் இந்த அபலைப் பெண். அப்போது இவரது கணவரின் தம்பியும் பொது மக்களும் சேர்ந்து மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தனர்.
இதையடுத்து தனது தந்தையின் இந்த படுபாதக செயலை சரவணனின தம்பி தட்டிக் கேட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் உதவியுடன் தனது இளைய மகன் மீதே திருட்டு வழக்குப் போடச் செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டார் தந்தை தனபால்.
வீட்டில் தனக்கு இடைஞ்சலாக இருந்த இளைய மகனையும் உள்ளே அனுப்பிவிட்ட தனபாலுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. தொடர்ந்து பகல், இரவு என்று பாராமல் கீதாவை கற்பழிக்க முயன்றுள்ளார்.
இதையடுத்து போலீசாரிடம் கீதா புகார் கொடுத்தும் பலன் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் தனக்கு நியாயம் கேட்டு தனது கைக் குழந்தையுடன் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர் அங்கு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
கலெக்டர் அலுவலக வாயிலேயே அந்தப் பெண் குழந்தையுடன் அமர்ந்துள்ளார்.
தனக்கு நியாயம் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்காத வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கூறுகிறார் கீதா.
நியாயம் கிடைக்குமா?