ரஜினிக்கு பா.ம.கவின் கேள்விப் பட்டியல்
சென்னை:
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்குக் காரணமே ராஜ்குமார்தான். அவரைப் போய் எம்.ஜி.ஆர்,சிவாஜியுடன் ரஜினி ஒப்பிட்டுப் பேசுவது கண்டனத்துக்குரியது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம்மாவட்ட செயலாளர் பசுபதி கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கு மிக நெருக்கமானவர் பசுபதி எனபது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் பெங்களூர் பேச்சுக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் கடுமையான எதிர்ப்புதெரிவித்திருந்தார். ராமதாஸ் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம்நடத்தி வருகிறார்கள்.
இந் நிலையில் ரஜினிக்கு பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் புள்ளி விவரங்களோடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட பாமக செயலாளரான பசுபதி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் தமிழர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் நடிகர் ராஜ்குமாரின் ரசிகர்கள். இவர்களை ஒருபோதும் ராஜ்குமார் கண்டித்ததில்லை. ஆனால் இந்த ராஜ்குமாரை, தமிழகத்தின் ஒப்பற்ற தலைவரான எம்.ஜி.ஆர்., ஒப்பற்ற நடிகரான சிவாஜி கணேசனுடன் ஒப்பிட்டுப் பேசி அவர்களைக் கேவலப்படுத்தியுள்ளார் ரஜினி.
சமீபத்தில் கன்னடத்தில் எச்.டூஓ என்ற படம் வந்தது. அதில் பிரபுதேவா (இவரும் கன்னடர்தான்) தமிழ் பேசி நடித்துள்ளார். இதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ராஜ்குமாரின் மனைவி தலைமையில் கன்னடர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினார்கள். இதை ரஜினி கண்டித்தாரா?
மைசூருக்கு ஷூட்டிங் போன நடிகர் சரத்குமார், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரை கன்னட வெறியர்கள் தாக்கினார்கள். அப்போது அதைக் கண்டித்தாரா ரஜினி?
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தர கன்னடர்கள் மறுக்கிறார்கள். இதனால் தமிழகத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்காக கவலைப்பட்டு இருப்பாரா ரஜினி.? தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கேட்டிருப்பாரா?
சென்னையில் ஒரு கல்யாண மண்டபம் மட்டுமே ரஜினிக்கு சொந்தமாக இருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்நாடகத்தில்தான் ரஜினி தனது எல்ா தொழிற்சாலைகளையும் வைத்துள்ளார். இதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
தமிழ் மக்களிடம் சம்பாதித்த பணத்தில் வாழ்ந்து கொண்டுள்ள ரஜினி காந்த், வீரப்பனைக் கொல்ல வேண்டும் பேசியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சிதம்பரநாதனை வீரப்பன் கொன்றபோது எங்கே போயிருந்தார் ரஜினி. அதை அவர் கண்டிக்கவில்லையே? ஆனால் ராஜ்குமார் கடத்தப்பட்டதை மட்டும் அவர் பயங்கரமாக கண்டித்துள்ளாரே?
ரஜினியிடம் இருப்பது தமிழர் பாசமா அல்லது கன்னடர் பாசமா? இவருக்கு தமிழர்களைப் பற்றிக் கவலையே இல்லை.
டாக்டர் ராமதாஸ் கூறிய கருத்துக்களைக் கொச்சைப்படுத்தவோ அல்லது பாமகவினரின் உணர்வுகளை சீண்டவோரஜினி ரசிகர்கள் முயன்றால் அவர்களால் வெளியில் நடமாட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று கூறியுள்ளார் பசுபதி.