வீரப்பனை சந்திக்க சுப்பு கிருஷ்ணாவை அனுப்ப கர்நாடகம் முடிவு
பெங்களூர்:
நாகப்பாவை மீட்க வீரப்பனுடன் பேச மைசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பு கிருஷ்ணாவை காட்டுக்குள் தூதராக அனுப்ப கர்நாடக அரசுமுடிவு செய்துள்ளது.
முதலில் இன்னொரு வழக்கறிஞரான வேணுகோபாலை அனுப்ப கர்நாடகம் திட்டமிட்டது. ஆனால், இன்று நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் வழக்கறிஞர் சுப்பு கிருஷ்ணாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வீரப்பனைச் சந்திக்க வீரப்பனுடன் பேச தூதரை அனுப்ப மாட்டோம் என தமிழகம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால், தங்களதுமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரையே தூதராக அனுப்ப கர்நாடக முதல்வர் கிருஷ்ணா முடிவு செய்துள்ளார். தூதராக யாரை அனுப்புவதுஎன்பது குறித்து விவாதிக்க கர்நாடக அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடியது.
ஒரு பக்கம் தமிழகத்துடன் சேர்ந்து அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ள கர்நாடக அரசு, வீரப்பனுடன் பேசவும்தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
வேணுகோபாலுக்கு பதிலாக...
வீரப்பனுக்கு உதவியதாகக் கூறி தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காகநீதிமன்றத்தில் போராடி வரும் வழக்கறிஞர் வேணுகோபால் தானே தூதராகச் செல்ல முன் வந்தார்.
வீரப்பனின் தம்பி அர்ஜூனன் கர்நாடக போலீசாரால் கொல்லப்படுவதற்கு முன் அவனுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜாரானவர்வேணுகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவரை மைசூரில் இருந்து பெங்களூருக்கு அவசரமாக வரச் சொன்னார் முதல்வர் கிருஷ்ணா. இதைத் தொடர்ந்து அவர்நேற்றிரவு முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.
முதலில் வீரப்பனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு கிருஷ்ணா உத்தரவிட்டார். இந்தத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் தான்உங்களைத் தூதராக அனுப்புவது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்க முடியும் என அவரிடம் கிருஷ்ணா கூறியிருந்தார்.
இந் நிலையில் மைசூர் சிறையில் உள்ள தமிழ் தடா கைதிகளுக்காக வேணுகோபாலுடன் ஆஜரான சுப்பு கிருஷ்ணாவை அனுப்பலாம் எனகர்நாடக உளவுப் பிரிவினர் முதல்வர் கிருஷ்ணாவுக்கு அறிவுறுத்தினர். வேணுகோபாலை விட சுப்பு கிருஷ்ணா பல வழக்குகளில்தமிழர்களுக்கு ஆதரவான தீர்ப்பைப் பெற்றுத் தரும் அளவுக்கு மிகத் திறமையாக வாதாடியவர் என்பதால் அவர் மீது வீரப்பனுக்கு அதிகமரியாதை உள்ளதாக கர்நாடக உளவுப் பிரிவினர் கருதுகின்றனர்.
இதையடுத்து இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தூதராக அனுப்ப சுப்பு கிருஷ்ணாவின் பெயர் இறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரவு பறந்தது:
காட்டுக்குச் செல்ல தயாராக இருங்கள் என அவருக்கு பெங்களூரில் இருந்து அவசர உத்தரவு பறந்துள்ளது. காட்டுக்குச் சென்று வீரப்பனைச்சந்திக்கத் தயார் என்று அவர் ஏற்கனவே தானாகவே முன் வந்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக வீரப்பனைச் சந்திக்க அவனது ஆட்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.அவர் இன்று அல்லது நாளை மைசூரில் இருந்து பெங்களூர் வந்து முதல்வர் கிருஷ்ணாவைச் சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
வீரப்பன் ஏற்பானா?
தமிழகம் தூதரை அனுப்பாததால் கர்நாடகமே தனது தூதரை அனுப்பும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து தான் தூதர்வர வேண்டும் என வீரப்பன் பிடிவாதம் பிடிப்பானோ என்ற அச்சமும் கர்நாடக அதிகாரிகள் மத்தியில் நிலவி வருகிறது.
முன்னதாகத் தூதரக் செல்லுமாறு கர்நாடக முதல்வரால் கோரப்பட்டிருந்த வேணுகோபால் தன்னுடன் சில பத்திரிக்கையாளர்களையும், இருமுக்கியப் பிரமுகர்களையும் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தார். தூதராகச் செல்பவர்கள் மீதெல்லாம் ஏதாவது குற்றச்சாட்டுகள்கூறப்பட்டதால் அந்த முடிவில் இருந்தார்.
இப்போது தூதராக செல்ல இருக்கும் சுப்பு கிருஷ்ணாவும் உடன் யாரையாவது அழைத்துச் செல்வாரா அல்லது தனியாகவே செல்வாராஎன்று தெரியவில்லை.
கிருபாகர்- செனானி:
முன்னதாக வேணுகோபால், சுப்பு கிருஷ்ணா ஆகியோர் தவிர இன்றும் இருவரின் பெயர்களையும் கர்நாடகம் பரிசீலித்தது.
வன விலங்கு ஆராய்ச்சி நிபுணர்களான கிருபாகர் மற்றும் செனானி ஆகியோர் தான் இந்த மற்ற இருவர். இந்த இருவரையும் கடந்த 1997ம்ஆண்டு அக்டோபரில் வீரப்பன் ஒருமுறை கடத்திச் சென்று 14 நாட்கள் காட்டில் வைத்திருந்து விடுவித்தான். காட்டில் இருந்தபோது இந்தஇருவரையும் வீரப்பனுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
அவர்கள் வீரப்பனையும் பல போஸ்களில் படம் பிடித்துவிட்டு வந்தனர். பி.பி.சி., டிஸ்கவரி, நேசனல் ஜியாக்ரபிக் போன்ற தொலைக்காட்சிகளுக்கு வன விலங்குகள் குறித்து படம் எடுத்துத் தரும் உலக அளவில் பிரசித்தி பெற்ற வன விலங்கு ஆராய்ச்சியாளர்கள் இவர்கள்.இந்த இருவரும் அந்தக் கடத்தலில் இருந்து வீரப்பனின் நண்பர்களாகிவிட்டனர்.
அதன்பின்னர் பலமுறை இவர்கள் காட்டுக்குள் சென்றபோதும் இவர்களை வீரப்பன் தொந்தரவு செய்ததில்லை. இதனால் இவர்களைஅனுப்பலாமா என்றும் கர்நாடகம் யோசித்தது.
மேலும் முன்னாள் போலீஸ் அதிகாரிகளில் யாரையாவது அனுப்பலாமா என்றும் கூட கர்நாடகம் யோசித்தது.
இந் நிலையில் உளவுப் பிரிவின் யோசனையால் சுப்பு கிருஷ்ணாவின் பெயர் இப்போதைக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மைசூரில் இருந்த சுப்பு கிருஷ்ணாவிடம் கேட்டபோது, என் மீது அரசு வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என்னை வீரப்பன்அவர்கள் தூதுவராக ஏற்றுக் கொண்டால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன் என்றார்