கொழும்பு வன்முறைக்கு இடையே அமைதி பேச்சு தொடக்கம்
நகோன் பதோம் (தாய்லாந்த்):
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைகள் மிகுந்த நம்பிக்கையுடன் இன்றுபிற்பகலில் தொடங்கின.
இதற்கிடையே கொழும்பில் முஸ்லீம்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையே மதக் கலவரம் மூண்டதால் தலைநகரில் ஊரடங்குஅமலாக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள்:
தாய்லாந்தில் உள்ள நகோன் பதோமில் உள்ள ஓய்வு விடுதியில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சத்தாகிப் நகரில் கடற்படைத்தளத்தில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் பெரும் வெற்றி பெற்றன.
இதையடுத்து இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைவரை இப் பேச்சுவார்த்தைகள் தொடரும்.
கூட்டு அதிரடிப்படை அமைப்பது, தமிழர் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவது, நாடு கடந்து வாழும்தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியேறச் செய்வது, சீரமைப்புப் பணிகளுக்கான நிதி திரட்டுவது ஆகியவிஷயங்கள் குறித்து இதில் முக்கியமாக பேசப்பட உள்ளன.
பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக அமெரிக்க செய்தி நிறுவனத்திடம் பேசிய விடுதலைப் புலிகளின் அரசியல்ஆலோசகர் ஆண்டர் பாலசிங்கம், நாங்கள் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறோம். இருதரப்பினரும் அடி மேல் அடி எடுத்து வைக்கிறோம். மிகுந்த நம்பிக்கைகளுடன் பேசி வருகிறோம் என்றார்.
இலங்கையின் சார்பில் அமைச்சர் பெரிஸ் 16 பேர் குழுவுடன் தாய்லாந்து வந்துள்ளார். புலிகள் சார்பில் பாலசிங்கம்தலைமையில் 6 பேர் குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தரப்பிலும் முதல் முறையாக ராணுவத் தளபதிகளும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டுள்ளனர்.புலிகள் சார்பில் கருணாவும், இலங்கை அரசு சார்பில் மேஜர் ஜெனரல் சாந்தா கொட்டேகோடாவும் பேச்சுக்களில்பங்கேற்றுள்ளனர்.
கொழும்பில் ஊரடங்கு:
இதற்கிடையே இலங்கையின் தலைநகர் கொழும்பில் சிங்களர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்டபயங்கரமான மோதலைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த இந்த மோதல்களில் ஒரு மூஸ்லீம் கொல்லப்பட்டார். 12 பேர் வரை காயமடைந்தனர். மேலும் ஐந்துவீடுகளும், நான்கு வாகனங்களும் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து தான் கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை ஓரளவு ஊரடங்குதளர்த்தப்பட்ட போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன.
இதையடுத்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள்இருப்பதாகப் போலீசார் தெரிவித்தனர்.
இந்தக் கலவரங்களால் தாய்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றுஇலங்கை அரசு தெரிவித்துள்ளது.