திமுக நெருக்கடி: விழி பிதுங்கும் ராம்மோகன் ராவ்
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது, இது தொடர்பாக மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவிடம் தமிழக எதிர்க் கட்சிகள் இன்று மனு கொடுத்தன.
தமிழக சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, சட்டசபைக் கூட்டத் தொடரை ஒரு வார காலமே நடத்துவது ஆகியவற்றைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய 62 பேர் குழு இன்று ஆளுநர் ராம் மோகன் ராவை சந்தித்தது.
கூட்டாக சென்ற கூட்டணி:
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் சென்ற இக்குழுவில் மதிமுக தலைவர் வைகோ, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், தலைமை நிலையச் செயலாளர் துமுைரருகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சட்டமன்ற காஙகிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் தலைவர் ஹேமச்சந்திரன், திருக்கச்சூர் ஆறுமுகம் (பாமக) உள்ளிட்ட தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
புகார்கள் விவரம்:
ஆளுநரிடம் தரப்பட்டுள்ள புகாரில், தமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளைகளைத் தடுக்காத போலீசார், முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல்வாதிகள் மீது பொய் வழக்கு போடுவதிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குண்டர்களைக் கைது செய்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு எண்கெளன்டர் கொலைகளையே போலீசார் நிறைவேற்றி வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்ஸ்பெக்டர்களே கொலை வழக்கில் சிக்குகிறார்கள். டிஐஜியே முத்திரைத் தாள் மோசடியில் சிக்குகிறார். சென்னையைச் சுற்றி தினமும் கொள்ளை. புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியை கொல்ல முயற்சி.
இதைப்பற்றி விவாதிக்க சட்டமன்றத்தில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. விவாதத்துக்கு இடம் தராமல் 7 நாளில் கூட்டத்தை முடிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பொறுப்பு இருக்கு:
புகார் மனு கொடுத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எல்லை மீறிப் போயுள்ள சட்டம், ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விவாதத்திற்குப் பயந்தே சட்டசபைக் கூட்டத் தொடரை ஒரு வார காலத்திற்கு மட்டும் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த ஜனநாயகப் படுகொலையை தடுத்து நிறுத்த, அரசியல் சட்டத்தில் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என வற்புறுத்தினோம். அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. மத்திய அரசுக்கு தமிழக சட்டம், ஒழுங்கு சீர்குலைவை எடுத்துக் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
தனக்கு சில பொறுப்புக்கள் இருப்பதை ஆளுநரும் எங்களிடம் ஒப்புக் கொண்டார். இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கிறாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நடவடிக்கை இல்லாவிட்டால் பிரதமருக்கு மனு அனுப்புவோம் என்றார் அன்பழகன்.
அந்த வார்த்தையை நாங்க சொல்லலை:
எஸ்.ஆர் பாலசுப்பிரமணியம் பேசுகையில், மாநில அரசின் தவறுகளைத் திருத்த ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. அதை அவர் பயன்படுத்த வேண்டும் என்றார்.
ஆட்சியைக் கலைக்குமாறு கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, நாங்கள் அப்படிக் கோர மாட்டோம் என்றார். அதே போல சட்டமன்றத்தை முடக்குமாறு கோரியுள்ளீர்களா என்று கேட்டபோது, அந்த வார்த்தையை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஆனால், கவர்னருக்கென சில பொறுப்புக்கள் உள்ளன என்றார்.
நெருக்கடியில் ஆளுநர்:
வைகோ பேசுகையில், சட்டமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சனை தொடர்பாக யாரும் பேசக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று சபாநாயகர் காளிமுத்து போட்டுள்ள தடை ஜனநாயகத்துக்கு விரோதமானது. பத்திரிக்கைகளையும், எதிர்க் கட்சிகளையும் நசுக்கும் முயற்சி இது. இந்த விஷயத்தில் கவர்னர் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்று நம்புகிறோம் என்றார்.
தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசிடம் கூறிவிட்ட திமுக, அவரை பதவியில் இருக்க வைத்தே நெருக்கடி கொடுக்கும் திட்டத்துக்கு வந்துள்ளது. அதன் முதல் படியாகவே இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மத்திய அரசு ஓலைகள் அனுப்பும்.
சிறப்புப் படைகள்:
இந் நிலையில் சென்னை புறநகரில் நடந்து வரும் முகமூடிக்கொள்ளைகளைத் தடுக்கவும் கொள்ளையர்களைப் பிடிக்கவும் தனிப் போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிகார் மற்றும் ஆந்திர மாநிலக் கும்பல்கள் தான் இந்தக் கொள்ளை, கொலைகளை நடத்தி வருவதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இக் கொள்ளைக் கும்பலில் ஒருவனது பெயர் விஜி என்ற விஜயகுமார் என்றும், அவன் ஆந்திராவைச் சேர்ந்தவன் என்றும் அடையாளம் தெரிந்துள்ளது.
இரவு நேரத்தில் புறநகர்ப் பகுதிகளில் ரோந்தை அதிகரித்துள்ள போலீசார், இரவில் கும்பலாக வருபவர்களிடம் கைரேகையையும் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனர்.
டிஎஸ்பிக்கள் வீடுகளில் கொள்ளை:
இந் நிலையில் சென்னையில் வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் 2 டி.எஸ்.பிக்களின் வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது.
அந்த வீடுகளில் காவலுக்கு இருந்த நாய்களுக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து தூங்க வைத்துவிட்டு கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.